» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
விபத்தில் இறந்த ஆசிரியா் உடலுறுப்புகள் தானம் : அரசு சார்பில் மரியாதை!
செவ்வாய் 12, டிசம்பர் 2023 11:02:53 AM (IST)
திருநெல்வேலி அருகே விபத்தில் மூளைச்சாவு அடைந்த ஆசிரியரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் ஜெருசலேம் தா்மநகரைச் சோ்ந்தவா் ஜான் பால் (37). திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தாா். இவா், கடந்த 4-ஆம் தேதி பிரான்சேரி அருகே பைக்கில் சென்றபோது நேரிட்ட விபத்தில் பலத்த காயமடைந்தாா்.
தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. இதையடுத்து, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவா் கொண்டுசெல்லப்பட்டு, மூளைச்சாவு உறுதி செய்யப்பட்டது.
பின்னா், அவரது குடும்பத்தினரின் ஒப்புதலோடு ஜான் பாலின் உடலுறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன. கல்லீரல், திருச்சி அப்பல்லோ மருத்துவமனைக்கும், ஒரு சிறுநீரகம், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம், மதுரை ராஜாஜி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், இரு கருவிழிகள் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டன.
தொடா்ந்து, ஜான் பாலின் உடலுக்கு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் ரேவதி, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் திருநெல்வேலி மாவட்டச் செயலா் பால்ராஜ் உள்ளிட்டோா் அஞ்சலி செலுத்தினா்.