» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

புத்தாண்டு பிறப்பையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

திங்கள் 1, ஜனவரி 2024 8:37:11 AM (IST)

புத்தாண்டு பிறப்பையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் நள்ளிரவில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் திரளானவர்கள் கலந்துகொண்டு புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

2024-ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு நேற்று நள்ளிரவு பிறந்தது. இதையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் நள்ளிரவில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. பாளையங்கோட்டையில் உள்ள கத்தோலிக்க ஆலயங்கள், சி.எஸ்.ஐ. ஆலயங்களில் நள்ளிரவு 11 மணி அளவில் சிறப்பு பிரார்த்தனை தொடங்கியது. 12 மணிக்கு புத்தாண்டு பிறந்ததும், ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

பாளையங்கோட்டை தெற்கு பஜாரில் உள்ள சவேரியார் பேராலயத்தில் பிஷப் அந்தோணிசாமி தலைமையிலும் புத்தாண்டு பிரார்த்தனையும், சிறப்பு திருப்பலியும் நடைபெற்றது. பாளையங்கோட்டை ஊசி கோபுரம் சி.எஸ்.ஐ. கதிட்ரல் ஆலயம் உள்ளிட்ட அனைத்து சி.எஸ்.ஐ. ஆலயங்களிலும் நள்ளிரவில் புத்தாண்டு சிறப்பு ஆராதனையும், அதிகாலையில் நற்கருணை ஆராதனையும் நடந்தது.

புத்தாண்டை கொண்டாடும் வகையில் நெல்லை மாநகரில் சந்திப்பு, பாளையங்கோட்டை, டவுன் உள்ளிட்ட பெரும்பாலான பகுதியில் இளைஞர்கள் தயார் நிலையில் இருந்தனர். இரவு 12 மணிக்கு கேக் வழங்கி புத்தாண்டை வரவேற்றனர். மேலும் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதேபோல் குடியிருப்பு பகுதிகளில் குடும்பத்தினர் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

புத்தாண்டையொட்டி நெல்லை மாநகரம் முழுவதும் முக்கிய சந்திப்புகளில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மாநகர போலீஸ் கமிஷனர் மகேஸ்வரி உத்தரவின் பேரில் துணை கமிஷனர்கள் ஆதர்ஷ்பசேரா, சரவணகுமார், அனிதா ஆகியோர் நேரடி மேற்பார்வையில் மாநகரப் பகுதியில் 562 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இந்த போலீசார் நேற்று விடிய விடிய வாகன சோதனையில் ஈடுபட்டனர். நள்ளிரவுக்கு பிறகு மோட்டார் சைக்கிள் மற்றும் வாகனங்களில் சென்றவர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினார்கள். புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு நள்ளிரவு 1 மணிக்கு பிறகு அனுமதி இல்லை என்பதால் வாகனத்தில் யாரும் அதிகமாக செல்லக்கூடாது என்று வாகனத்தில் சென்ற வாலிபர்களை போலீசார் எச்சரித்தனர்.

நெல்லை வண்ணார்பேட்டை மேம்பாலத்தில் நேற்று நள்ளிரவில் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டது. இதனால் மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிள் செல்லவில்லை. இதேபோல் நெல்லை மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் நேரடி மேற்பார்வையில் மாவட்டம் முழுவதும் போலீசார் விடிய, விடிய வாகன சோதனையில் ஈடுபட்டனர். முக்கிய இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்திலும் பயணிகளிடம் ரயில்வே போலீசார் சோதனை நடத்தினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory