» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை : எம்பவர் இந்தியா கோரிக்கை
செவ்வாய் 2, ஜனவரி 2024 12:33:25 PM (IST)
தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எம்பவர் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக எம்பவர் இந்தியா சுற்றுச்சூழல் & நுகர்வோர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நடுவம் கௌரவ செயலாளர் ஆ. சங்கர், தமிழக அரசுக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில், "திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை பகுதியிலிருந்து தச்சநல்லூர் பைபாஸ் பகுதியில் அமைந்துள்ள பாதாளச் சாக்கடை சுத்திகரிப்பு நிலையத்திற்கு, பாதாளச் சாக்கடை குழாயானது தாமிரபரணி ஆற்றின் மேலோட்டமாக அமைக்கப்பட்டு இருந்தது.
தற்போது தாமிரபரணியில் ஏற்பட்ட வெள்ளத்தினால் குழாய் அடித்து செல்லப்பட்டு குழாய் முடிவில்லாமல் இருக்கிறது. தற்போது வண்ணாரப்பேட்டையில் அனைத்து கழிவுநீரும் சுத்திகரிப்பு நிலையத்திற்குச் செல்லாமல், குழாய் நிவாரணப் பணி நடைபெறாததால், அனைத்து கழிவுநீரும் தாமிரபரணி ஆற்றிலே காலை மற்றும் இரவு நேரங்களில் அதிகமாகத் துர்நாற்றத்துடன் கலக்கிறது.
இந்த தாமிரபரணி ஆற்றுப் பாலத்தை இரவு நேரங்களில் கடந்து சென்றால், மிகக் கொடிய துர்நாற்றம் வீசுகிறது. இந்த தாமிரபரணி நீரினை வல்லநாட்டிலிருந்து தூத்துக்குடி வாழ் மக்கள் குடிநீருக்குப் பயன்படுத்துகிறார்கள். ஆகையால் தமிழக அரசாங்கம் தாமிரபரணிக்கு நதியைப் பாதுகாக்க விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.