» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நிவாரண உதவி பெற நாளை வரை மட்டுமே அவகாசம்: நெல்லை ஆட்சியர் அறிவிப்பு
செவ்வாய் 2, ஜனவரி 2024 3:53:41 PM (IST)
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண உதவி பெற நாளை (ஜன. 3) வரை மட்டுமே அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக நெல்லை ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் பெருமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடும்ப அட்டை அடிப்படையில் நிவாரண உதவியை வழங்க அரசு உத்தரவிட்டது. அதன்படி, அதிகம் பாதித்த பகுதிகளில் தலா ரூ.6000, பிற பகுதிகளுக்கு தலா ரூ.1000 வழங்கப்படுகிறது. இதற்காக ரூ. 220 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
குடும்ப அட்டை கேட்டு புதிதாக விண்ணப்பித்துள்ளவா்களுக்கும் நிவாரணம் வழங்கப்பட உள்ளதாகவும், வேறு பகுதிகளில் இருந்து தற்காலிகமாக தங்கியிருந்து மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருள்கள் உள்ளிட்ட நிவாரண உதவிகள் வழங்கப்படும் என்று முன்னதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண உதவி பெற நாளை (ஜன. 3) வரை மட்டுமே அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக நெல்லை ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 92% குடும்ப அட்டை தாரர்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.