» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தலையில் அம்மிக்கல்லைப்போட்டு தாயை கொன்ற மகன்: பொங்கல் பரிசு தராததால் வெறிச்செயல்!

வெள்ளி 12, ஜனவரி 2024 8:19:08 AM (IST)

பாவூர்சத்திரம் அருகே பொங்கல் பரிசாக வாங்கிய ரூ.1,000 தராததால் தாயின் தலையில் அம்மிக்கல்லைப்போட்டு கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே திப்பணம்பட்டி பத்திரகாளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுப்பையா. இவருடைய மனைவி சிவந்திப்பூ (80). இவர்களுக்கு 4 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி அப்பகுதியில் குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர். சுப்பையா கடந்த சில ஆண்டுகளுக்கு ஆண்டு முன்பு இறந்து விட்டார். எனவே சிவந்திப்பூ தனது வீட்டில் தனியாக வசித்து வந்தார். அவரை மகள்கள் அவ்வப்போது சென்று பராமரித்து வந்தனர்.

சிவந்திப்பூவின் மூத்த மகன் முருகன் (50). இவர் அடிக்கடி மது குடித்து விட்டு, தாயாரிடம் வீட்டை விற்று பணம் தருமாறு கூறி தகராறு செய்து வந்தார். மேலும் தாயாரின் முதியோர் உதவித்தொகையையும் கேட்டு தகராறில் ஈடுபட்டு வந்தார். நேற்று முன்தினம் சிவந்திப்பூ அங்குள்ள ரேஷன் கடையில் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1,000 ரொக்கப்பணம் வாங்கி வந்தார். இதனை அறிந்த முருகன் இரவில் மது போதையில் தாயாரின் வீட்டுக்கு சென்று, பொங்கல் பரிசாக வாங்கிய ரூ.1,000-ஐ தருமாறு கேட்டு தகராறு செய்தார்.

அதற்கு சிவந்திப்பூ தனக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளதால், மாத்திரைகள் வாங்குவதற்காக பணத்தை வைத்துள்ளதாக கூறி தர மறுத்தார். இதனால் ஆத்திரமடைந்த முருகன், பெற்ற தாயார் என்றும் பாராமல் சிவந்திப்பூவின் கழுத்தை சேலையால் இறுக்கியதாக கூறப்படுகிறது. மேலும் வீட்டில் இருந்த அம்மிக்கல்லையும் தூக்கி வந்து தாயாரின் தலையில் போட்டதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த சிவந்திப்பூ ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த படுகொலை குறித்து அறிந்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து, பாவூர்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இறந்த சிவந்திப்பூவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்தனர். பாவூர்சத்திரம் அருகே பொங்கல் பரிசாக வாங்கிய ரூ.1,000 தராததால், தாயின் தலையில் தொழிலாளி கல்லைப்போட்டு கொன்ற பயங்கர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


மக்கள் கருத்து

தமிழன்Jan 12, 2024 - 09:52:40 AM | Posted IP 162.1*****

காரணம் மது. வாழ்க அரசு டாஸ்மாக்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory