» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மனைவியை குத்திக்கொன்று டிரைவர் தற்கொலை: குடும்ப தகராறில் விபரீதம்!

வெள்ளி 19, ஜனவரி 2024 8:27:30 AM (IST)

கூடங்குளத்தில் குடும்ப தகராறில் மனைவியை குத்திக்கொன்று டிரைவர் தற்கொலை செய்தார்.

நெல்லை மாவட்டம் கூடங்குளம் கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் எட்வர்டு (80). இவர் டிரைவராக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி சவுந்தரவள்ளி (74). இவர்களுக்கு 4 மகள்களும், 2 மகன்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. 2 மகன்களும் வெளியூர்களில் குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர்.

இதனால் எட்வர்டு-சவுந்தரவள்ளி தம்பதியர் வீட்டில் தனியாக வசித்து வந்தனர். அப்பகுதியில் வசிக்கும் மகள்கள் அவ்வப்போது பெற்றோரை வந்து பார்த்து சென்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு எட்வர்டுக்கும், மனைவி சவுந்தரவள்ளிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் எட்வர்டு மனைவியை விட்டு பிரிந்து சென்று, அப்பகுதியில் உள்ள மகளின் வீட்டில் வசித்து வந்தார்.

பின்னர் மகன்கள், மகள்கள் தங்களது பெற்றோரை சமாதானப்படுத்தி ஒன்றாக சேர்ந்து வாழுமாறு அறிவுறுத்தினர். இதையடுத்து எட்வர்டு-சவுந்தரவள்ளி ஆகியோர் மீண்டும் தங்களது வீட்டில் ஒன்றாக வசித்து வந்தனர். நேற்று அதிகாலையில் கணவன்-மனைவி இடையே மீண்டும் குடும்ப தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த எட்வர்டு கத்தியால் மனைவி சவுந்தரவள்ளியை சரமாரியாக குத்தியதாக கூறப்படுகிறது.

இதில் பலத்த காயமடைந்த சவுந்தரவள்ளி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னர் எட்வர்டு வீட்டின் வளாகத்தில் உள்ள மரத்தில் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார். நேற்று காலையில் எட்வர்டு மரத்தில் தூக்கில் தொங்கியதையும், வீட்டில் சவுந்தரவள்ளி கத்திக்குத்து காயங்களுடன் பிணமாக கிடந்ததையும் பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கூடங்குளம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இறந்த எட்வர்டு, சவுந்தரவள்ளி ஆகியோரின் உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கூடங்குளத்தில் குடும்ப தகராறில் மனைவியை சரமாரியாக குத்திக்கொன்ற டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory