» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
குழந்தைகள் நலக் குழுவிற்கு தலைவர், உறுப்பினர்கள் நியமனத்திற்கு விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர் தகவல்
செவ்வாய் 20, பிப்ரவரி 2024 4:56:15 PM (IST)
குழந்தைகள் நலக் குழுவிற்கு தலைவர், உறுப்பினர்கள் நியமனத்திற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தென்காசி ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் "2015 ஆம் ஆண்டின் இளைஞர் நீதி (குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு) சட்டத்தின் விதிமுறைகளின் படி அமைக்கப்பட்டுள்ள குழந்தை நலக் குழுக்களுக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களாக நியமிக்கப்படுவதற்காக கீழே குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளை கொண்ட தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
குழந்தை நலக் குழுவிற்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அரசால் மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர். மற்றும் இப்பதவி அரசு பணிஅல்ல. விண்ணப்பதாரர்கள் குழந்தை உளவியல் அல்லது மனநல மருத்துவம் அல்லது சட்டம் அல்லது சமூகபணி அல்லது சமூகவியல் அல்லது மனித ஆரோக்கியம் அல்லது கல்வி அல்லது மனித மேம்பாடு அல்லது மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு கல்வி ஆகியவற்றில் ஏதேனும் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
மற்றும் குழந்தைகள் தொடர்பான உடல்நலம், , கல்வி அல்லது குழந்தைகளுக்கான நலப்பணிகளில் குறைந்தது 7 ஆண்டுகள் முனைப்புடன் ஈடுபாடு கொண்டவர் அல்லது குழந்தை உளவியல் அல்லது மனநல மருத்துவம் அல்லது சட்டம் அல்லது சமூகப்பணி அல்லது சமூகவியல் அல்லது மனித ஆரோக்கியம் அல்லது கல்வி அல்லது மனித மேம்பாடு அல்லது மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு கல்வி ஆகியவற்றில் ஏதேனும் பட்டம் பெற்ற தொழில் புரிபவராக இருத்தல் வேண்டும்.
மேலும் விண்ணப்பதாரர்கள் நியமனம் செய்யப்படும் போது 35 வயதுக்கு குறையாதவராகவும் 65 வயதை பூர்த்தி செய்யாதவராகவும் இருத்தல் வேண்டும். ஒருநபர் குழந்தை நலக்குழு தலைவர் அல்லது உறுப்பினராக நியமனம் செய்த தேதியில் இருந்து மூன்று ஆண்டுகளுக்கு பதவி வகிப்பார். இதற்கான விண்ணப்ப படிவத்தை அந்தந்த மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிலிருந்து பெற்றுக்கொள்ளலாம். தகுதி வாய்ந்த நபர்கள் மேற்கண்ட பதவிக்கு அதற்கான அமைந்த படிவத்தில் 15 நாட்களுக்குள் கீழ்க்கண்ட முகவரியில் கிடைக்கப் பெறுமாறு விண்ணப்பிக்கலாம்.
இயக்குநர், சமூகப் பாதுகாப்புத்துறை, எண்.300, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை – 600 010. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் மேற்குறிப்பிட்ட அலுவலகத்திற்கு வந்து சேர வேண்டும். தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும். இதுகுறித்து அரசின் முடிவே இறுதியானது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.