» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
பயிற்சி மையத்தில் இளம்பெண்ணிடம் அத்துமீறிய மேற்பார்வையாளர் அதிரடி கைது!
புதன் 21, பிப்ரவரி 2024 8:20:44 AM (IST)
கூடங்குளம் அருகே பயிற்சி மையத்தில் இளம்பெண்ணை மானபங்கம் செய்ய முயன்றதாக மேற்பார்வையாளர் கைது செய்யப்பட்டார்.
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அனுமின் திட்டப்பணியில் வேலை வாய்ப்பு பெறுவதற்காக கூடங்குளம் மற்றும் அதை சுற்றி 16 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள படித்தவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சி கூடங்குளம் அருகே உள்ள செட்டிகுளம் டவுன்ஷிப் பகுதியில் வைத்து நடந்து வருகிறது. இந்த பயிற்சி மையத்தில் திருச்சி மாவட்டம் பச்சைமலை பகுதியைச் சேர்ந்த முத்துசாமி மகன் சுரேஷ் (30) என்பவர் மேற்பார்வையாளராக வேலை செய்து வந்தார்.
பயிற்சிக்கு வந்த ஒரு இளம்பெண்ணிடம் சுரேஷ் தவறான எண்ணத்தில் பழகிவந்தார். சம்பவத்தன்று பயிற்சி மையத்திற்கு வந்த இளம்பெண்ணை சுரேஷ் கையை பிடித்து மானபங்கம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் அங்கிருந்து வெளியேறி தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.
உடனடியாக குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். ஆனால் அங்கு சுரேஷ் இல்லை. அங்கிருந்த சில ஊழியர்களும் அலட்சியமாக பதில் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் அங்கு கைகலப்பு ஏற்படும் சூழ்நிலை உருவானது. இதுகுறித்து உடனடியாக கூடங்குளம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஷாம் சுந்தர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அனைவரையும் கலைந்து செல்ல வைத்தனர்.
தொடர்ந்து பாதிக்கப்பட்ட இளம்பெண் கூடங்குளம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் இதுதொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் கணபதி மற்றும் போலீசார் பயிற்சி மைய மேற்பார்வையாளர் சுரேஷை பிடித்து அதிரடியாக கைது செய்தனர்.