» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தானியங்கி மழைமானி நிலையம் அமைக்கும் பணி : வருவாய் அலுவலர் ஆய்வு!
சனி 24, பிப்ரவரி 2024 5:53:56 PM (IST)
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை தாலுகா அலுவலகத்தில் தானியங்கி மழைமானி நிலையம் அமைக்கும் பணியினை மாவட்ட வருவாய் அலுவலர் மா.சுகன்யா இன்று (24.02.2024) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு முழுவதும் பெய்யும் மழையின் அளவினை துல்லியமாக அறியும் பொருட்டு அனைத்து மாவட்டங்களிலும் புதிதாக தானியங்கி மழைமானிகள் மற்றும் தானியங்கி வானிலை நிலையங்கள் அமைக்க அரசால் ஒப்புதல் வழங்கப்பட்டு அவற்றை நிறுவும் பணிகள் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி திருநெல்வேலி மாவட்டத்தில் மழையின் அளவினை கணக்கிடும் பொருட்டு முதற்கட்டமாக திருநெல்வேலி தாலுக்கா அளவில் 3 நிலையங்கள் பாளையங்கோட்டை தாலுக்கா அளவில் 4 நிலையங்கள், அம்பாசமுத்திரம் தாலுகா அளவில் 3 நிலையங்கள், சேரன்மகாதேவி தாலுகா அளவில் 2 நிலையங்கள், மானூர் தாலுகா அளவில் 5 நிலையங்கள், நாங்குநேரி தாலுகா அளவில் 8 நிலையங்கள், இராதாபுரம் தாலுக்கா அளவில் 7 நிலையங்கள், திசையன்விளை தாலுகா அளவில் 7 நிலையங்கள் என மொத்தம் 39 தானியங்கி மழைமானி நிலையங்கள் நிறுவுவதற்கு தகுதியான இடங்கள் தேர்வு செய்யப்பட்டு நிறுவுதல் மற்றும் செயல்படுத்துதல் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக, பாளையங்கோட்டை தாலுகா அலுவலகத்தில் தானியங்கி மழைமானி அமைத்திட கட்டுமான பணிகள் இன்று நடைபெற்றது. இதனை மாவட்ட வருவாய் அலுவலர் பார்வையிட்டார். இதே போல் மாவட்டத்தில் 39 இடங்களிலும் தானியங்கி மழைமானி நிலையங்கள் செயல்படுத்தும் பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவுள்ளது.நடைபெற்ற ஆய்வில், பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர் செல்வம் கலந்து கொண்டார்கள்.