» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் போட்டி? சரத்குமார் பதில்
திங்கள் 26, பிப்ரவரி 2024 12:18:40 PM (IST)
திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்று சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்தார்.
ஓரிரு மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டை இறுதி செய்வதில் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த முறை தமிழகத்தில் திமுக, அதிமுக மற்றும் பாஜக தலைமையில் மூன்று முக்கிய கூட்டணிகள் அமையவுள்ளன. திமுக தனது கூட்டணிக் கட்சிகளுடன் இறுதிகட்டப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.
கடந்த முறை ஒரே அணியாக தேர்தலை சந்தித்த பாஜகவும், அதிமுகவும் தற்போது தனித்தனியாக களமிறங்கியுள்ள நிலையில், தங்களின் கூட்டணிக்கு கட்சிகளை இழுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், கடந்த ஆண்டுகளில் அதிமுக கூட்டணியில் தேர்தலை சந்தித்த சமத்துவ மக்கள் கட்சி, வருகின்ற தேர்தலில் எந்த அணியில் இடம்பெறும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதுகுறித்து சமக தலைவர் சரத்குமார் பேசியது: "கட்சியின் உயர்நிலைக் குழுவில் ஒருமனதாக முடிவு எட்டப்படவில்லை. 2026 சட்டப்பேரவைத் தேர்தலை சந்திப்பதற்கு மக்களவைத் தேர்தல் கூட்டணி முக்கியம். அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. பாஜக பேச்சுவார்த்தைக்கு விருப்பம் தெரிவித்துள்ளனர்.
திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை. விரைவில் கூட்டணி குறித்தும், தேர்தலில் போட்டியிடுவது குறித்தும் தெரிவிக்கப்படும்.” என்றார்.