» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தண்ணீர் தொட்டியில் மூழ்கி பெண் சாவு : போலீசார் விசாரணை
ஞாயிறு 10, மார்ச் 2024 9:16:24 AM (IST)
பாளையங்கோட்டையில் தண்ணீர் தொட்டியில் மூழ்கி பெண் இறந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நெல்லை பாளையங்கோட்டை சமாதானபுரம் கிறிஸ்தவ கோவில் தெருவை சேர்ந்தவர் பிரேம்குமார். இவரது மனைவி பெர்சில்லா எலிசபெத் ராணி (59). இவர்களது மகள் சலோமி குளோரி ஜெபா (27). கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பிரேம்குமார் இறந்து விட்டார். இதையடுத்து கடந்த 2022-ம் ஆண்டு சலோமி குளோரி ஜெபாவுக்கு மார்சல் என்பவருடன் திருமணம் ஆனது.
அதன் பின்னர் பெர்சில்லா எலிசபெத் ராணி தனது மகளுடன் வசித்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன் பெர்சில்லா எலிசபெத் ராணிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த 7-ந் தேதி வீட்டில் இருந்த பெர்சில்லா எலிசபெத் ராணி திடீரென காணாமல் போனார். அக்கம்பக்கத்தில் தேடியும் கிடைக்கவில்லை. இதுதொடர்பாக பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்தில் அவரது மகள் புகார் தெரிவித்தார்.
நேற்று காலை வீட்டின் சமையலறையில் தண்ணீர் குழாயை திறந்த போது அதில் துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த சலோமி குளோரி ஜெபா வீட்டு மாடியில் இருந்த குடிநீர் தொட்டியை திறந்து பார்த்தார். அதில் பெர்சில்லா எலிசபெத் ராணி பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து அவர் உடனடியாக பாளையங்கோட்டை போலீஸ் நிலையம் மற்றும் தீயணைப்பு மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்தார். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து பெர்சில்லா எலிசபெத் ராணி உடலை கயிறு கட்டி வெளியே மீட்டு கொண்டு வந்தனர். தொடர்ந்து போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் பெர்சில்லா எலிசபெத் ராணி தண்ணீர் தொட்டியில் குதித்து தற்கொலை செய்து இருக்கலாம் என்று தெரிவித்தனர். எனினும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.