» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
காட்டு முயலை வேட்டையாடினால் நடவடிக்கை பாயும் : வனத்துறை எச்சரிக்கை
வியாழன் 14, மார்ச் 2024 10:27:26 AM (IST)
காட்டு முயலை வேட்டையாடினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருநெல்வேலி வனச்சரக அலுவலர் கே.சரவணக்குமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு நாட்டு இன நாய்கள் வளர்ப்போர் மற்றும் வேட்டைக்காரர்கள் சங்கம், வள்ளியூர் பகுதி, நெல்லை மாவட்டம் என்ற பெயரில் வள்ளியூரில் 17.03.2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணியளவில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளதாகவும், முயல் வேட்டையாடும் பாரம்பரிய உரிமையை மீட்டெடுக்கவும், வேட்டைக்காரர்களின் உரிமையை மீட்கவும், வேட்டைக்காரர்கள் அனைவரும் அணிதிரளும்படி வள்ளியூர் பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டும், சமூக வலைதளங்களில் செய்திகள் பரவியும் வருகிறது.
வன உயிரினங்களை வேட்டையாடுவதும், வேட்டையாட முயற்சிக்கும் எந்த ஒரு செயலும் 1972 வன உயிரினப்பாதுகாப்பு சட்டத்தின்படி குற்ற செயல் ஆகும். ஆதலால் பொதுமக்கள் யாரும் வன உயிரினப்பாதுகாப்பு சட்டத்தை மீற வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் வன உயிரினமான காட்டு முயலை பொதுமக்கள் யாரும் வேட்டையாடும் பட்சத்தில் இது குறித்து மாவட்ட வன அலுவலக கட்டுப்பாட்டு அறை எண். 0462 2553005, 0462 2903605 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என திருநெல்வேலி வனச்சரக அலுவலர் தெரிவித்துள்ளார்.