» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
மூன்றாவது முறையாக மோடி பிரதமராக பதவி ஏற்பார் : நயினார் நாகேந்திரன்
திங்கள் 25, மார்ச் 2024 5:07:38 PM (IST)
மூன்றாவது முறையாக மோடி பிரதமராக பதவி ஏற்பார் என்று நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் நம்பிக்கை தெரிவித்தார்.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் வேட்புமனு தாக்கல் தொடங்கி நான்காவது நாளான இன்று பல்வேறு அரசியல் கட்சியினர் தேர்தல் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். இந்த நிலையில் நெல்லை மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் நயினார் நாகேந்திரன் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயனிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களுடன் பேசிய அவர், "பாஜகவின் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தாலும் திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளித்த பாஜக தலைமை மற்றும் மாநில தலைவர் அண்ணாமலைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 25 ஆண்டுக்கு முன்பு அமைச்சராக இருந்தபோதும் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தபோதும் நெல்லை மாவட்டத்துக்கு பல்வேறு பணிகளை செய்துள்ளேன். அந்த மனநிறைவோடு வேட்பாளராக போட்டியிடுகிறேன்.
மக்கள் என்னை வெற்றி பெறச் செய்வார்கள் என்ற நம்பிக்கை நிரம்ப உள்ளது. மூன்றாவது முறையாக மோடி பிரதமராக பதவி ஏற்பார். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பிரதமர் யார் என்று கேட்டால் மோடி என்று சொல்கிறார்கள். வல்லரசாக இந்தியா உருவாக வேண்டும். மத்திய அரசு கொண்டுவரும் எந்த திட்டங்களாக இருந்தாலும் திருநெல்வேலி மக்களுக்கும் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுப்பேன். திமுக தேர்தல் அறிக்கையில் சொன்னதை எதையும் செய்யவில்லை.
திருநெல்வேலிக்கு பல்வேறு தொழிற்சாலைகள் அமைச்சராக இருந்தபோது கொண்டுவரப்பட்டது. என்னை அடையாளம் காட்டிய ஜெயலலிதா எம்ஜிஆர் உள்ளிட்ட தலைவர்களின் புகைப்படங்களை தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்துவேன். 72 வயதாகும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முதிர்ச்சி இல்லாமல் பேசி வருகிறார்.” என அவர் தெரிவித்தார்