» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் திருக்கல்யாணம் : திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
புதன் 27, மார்ச் 2024 8:05:18 AM (IST)
கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் முருகப்பெருமான், வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தமிழகத்தின் தென் பழனி என போற்றப்படும்் கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் பங்குனி உத்திரதிருவிழா விமரிசையாக நடைபெற்றது. இத்திருவிழாவில் சிகர நிகழ்ச்சியான தேரோட்ட நிகழ்ச்சி கடந்த 23-ம் தேதி நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரைவடம் பிடித்து இழுத்து சென்றனர். தொடர்ந்து நேற்று முன்தினம் அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, காலை 6 மணிக்கு திருவனந்தல் பூஜை, விளா பூஜை மற்றும் காலசந்தி பூஜைகள் நடந்தது.
தொடர்ந்து காலை 7 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. மதியம் 12 மணிக்கு உச்சிகால பூஜையை தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 7 மணியளவில் முருகப்பெருமான், வள்ளி தெய்வானையுடன் மணக்கோலத்தில் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார். பின்னர் வேத மந்திரங்கள் முழங்க சுவாமி, வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் விமரிசையாக நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.