» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லையில் கிணற்றில் மூழ்கி 2 நண்பர்கள் பலி
செவ்வாய் 16, ஏப்ரல் 2024 8:36:12 AM (IST)
நெல்லையில் கிணற்றில் மூழ்கி 2 நண்பர்கள் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லை பாளையங்கோட்டை அண்ணாநகர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சுடலைமணி (27). இவரது நண்பர்கள் சக்திநகரை சேர்ந்த மகாராஜன் (24), அருண் (21). இவர்கள் 3 பேரும் நேற்று காலையில் பாளையங்கோட்டை கோர்ட்டு அருகில் உள்ள ஒரு தனியாருக்கு சொந்தமான கிணற்றில் குளிக்க சென்றனர்.
ஆனால், கிணறு அமைந்துள்ள தோட்டத்தின் நுழைவு வாயில் பகுதியில் இருக்கும் கதவு பூட்டப்பட்டிருந்தது. இதனால் 3 பேரும் அங்குள்ள சுவர் ஏறி குதித்து உள்ளே சென்றனர். பின்னர் கிணற்றில் இறங்கி குளித்துக் கொண்டு இருந்தனர். அப்போது மகாராஜன், எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கினார். அவரை, சுடலைமணி காப்பாற்ற முயன்றார். ஆனாலும் அவரும் தண்ணீரில் மூழ்கினார். இதில் மூச்சுத்திணறிய அவர்கள் 2 பேரும் பரிதாபமாக இறந்தனர்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அருண் இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் முத்துகணேஷ் மற்றும் பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் அலுவலர் (பொறுப்பு) ராதாகிருஷ்ணன் தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். கிணற்றில் இறங்கி மகாராஜன், சுடலைமணி ஆகிய 2 பேரின் உடல்களையும் மீட்டு மேலே கொண்டு வந்தனர்.
பின்னர் போலீசார், 2 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். நெல்லையில் கிணற்றில் மூழ்கி 2 நண்பர்கள் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.