» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தூத்துக்குடியில் திமுகவின் தோல்வி ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று : கனிமொழி எம்பி பேச்சு!

செவ்வாய் 19, மே 2026 4:25:55 PM (IST)



தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் திமுக சந்தித்த தோல்வி என்பது எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். இதற்கான சரியான பதிலை நாம் கண்டறிய வேண்டும் என்று திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கனிமொழி எம்பி பேசினார்.

"கூட்டணி குறித்து நாம் சிந்திக்க வேண்டிய நேரம் இது. நமக்கான கட்டமைப்பை நாமே பலப்படுத்திக் கொள்வதன் மூலம், எதிர்காலத்தில் வேறு யாருடைய துணையும் இல்லாமல் திமுக அனைத்துத் தொகுதிகளிலும் தனித்து நின்று மகத்தான வெற்றி பெற முடியும்" எனத் தூத்துக்குடியில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்பி பேசியுள்ளார்.

தூத்துக்குடியில் உள்ள கலைஞர் அரங்கில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கீதா ஜீவன் தலைமை தாங்கிய இக்கூட்டத்தில், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும், கட்சியின் துணைப் பொதுச்செயலாளருமான கனிமொழி கருணாநிதி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, நிர்வாகிகளுக்குத் தேர்தல் களப் பணிகள் குறித்துப் பல்வேறு ஆலோசனைகளை வழங்கிப் பேசினார்.

கூட்டத்தில் கனிமொழி கருணாநிதி பேசியதாவது:    "நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் நாம் அடைந்த தோல்விகள் மற்றும் பின்னடைவுகள் குறித்து ஆழமாக ஆராய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் உள்ள மூன்று தொகுதிகளில் விளாத்திகுளம் மற்றும் கோவில்பட்டி ஆகிய இரண்டு தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக, இதுவரை நாம் வெற்றி பெறாத கோவில்பட்டி தொகுதியில் இந்த முறை மகத்தான வெற்றியைப் பதிவு செய்துள்ளோம்.

ஆனால், மாவட்டத் தலைநகரான தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் திமுக சந்தித்த தோல்வி என்பது எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். கீதா ஜீவன் எப்போதும் மக்களோடு மக்களாக நின்று களப்பணி செய்தவர்; ஆயினும் இங்குத் தோல்வி ஏற்பட்டுள்ளது. கள நிலவரம் என்னவென்றே புரியாமல் போனதுதான் யாரும் எதிர்பார்க்காத இந்தத் தோல்விக்குக் காரணம். இதற்கான சரியான பதிலை நாம் கண்டறிய வேண்டும்.

திமுகவின் இந்தத் தோல்விகளுக்கான உண்மைக் காரணங்களை ஆராய, கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் மாவட்டத்திற்கு இரண்டு பேர் கொண்ட 'சிறப்புக் குழுக்களை' அமைக்க உள்ளார். இந்த ஆய்வுக் குழுவினரிடம் கட்சி நிர்வாகிகள் எவ்வித ஒளிவுமறைவுமின்றி களத்தின் உண்மை நிலவரங்களை அப்படியே எடுத்துச் சொல்ல வேண்டும். சரியான கருத்துக்களையும், குறைபாடுகளையும் நீங்கள் திறந்த மனதோடு தெரிவிக்கும் போதுதான், கட்சித் தலைமை உரிய முடிவெடுத்து நமது உள்கட்சி கட்டமைப்பை முழுமையாக மாற்றியமைக்க முடியும்.

கூட்டணி குறித்து நாம் தீவிரமாகச் சிந்திக்க வேண்டிய தருணம் இதுவாகும். நம்மை நாமே அடிமட்ட அளவில் பலப்படுத்திக் கொள்ள வேண்டும். இதன் மூலம், எதிர்காலத்தில் யாரும் இல்லாமல் திமுக மட்டுமே அனைத்துத் தொகுதிகளிலும் தனியாக நின்று முழுமையாக வெற்றி பெற முடியும். இன்னும் சிறப்பான மக்கள் பணிகளைத் தொய்வின்றி வழங்குவதன் மூலமாக, திமுகவின் உண்மையான பலம் என்ன என்பதை அனைவருக்கும் காட்ட முடியும்" என நிர்வாகிகளிடையே எழுச்சியூட்டும் வகையில் பேசினார்.

இக்கூட்டத்தில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் கருணாநிதி (கோவில்பட்டி), மார்க்கண்டேயன் (விளாத்திகுளம்) மற்றும் மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து

podhu janamமே 19, 2026 - 07:58:31 PM | Posted IP 162.1*****

Two out of 3 DMK thoothukudi district MLAs are Ex ADMK

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory