» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
இந்தியாவில் முதன்முறையாக டிஜிட்டல் சென்சஸ் : நெல்லையில் பயிற்சி தொடக்கம்!
திங்கள் 25, மே 2026 12:54:24 PM (IST)

இந்தியாவில் 2027-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட உள்ள தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதற்கட்டப் பணிகளுக்கான மாவட்ட அளவிலான 3 நாட்கள் பயிற்சி முகாம், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் இரா.சுகுமார் தலைமையில் த் தொடங்கியுள்ளது.
ஆகஸ்ட் 1 முதல் முதற்கட்டக் கணக்கெடுப்பு: தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-க்கான முதற்கட்ட வீட்டுப் பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்புப் பணிகள் தமிழகம் முழுவதும் வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 30-ஆம் தேதி வரை ஒரு மாத காலம் நடைபெற உள்ளன.
இதனையொட்டி, நெல்லை மாவட்டத்தில் இப்பணிகளைத் தொய்வின்றி மேற்கொள்வதற்கான மாவட்ட அளவிலான முதற்கட்ட பயிற்சி முகாம் இன்று (25.05.2026) முதல் மே 27-ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறுகிறது. இந்த முக்கியப் பயிற்சி முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.இரா.சுகுமார் ஐ.ஏ.எஸ்., மாவட்ட வருவாய் அலுவலர் (DRO) மு.துரை, மாவட்ட வன அலுவலர் (DFO) இளங்கோ, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அனிதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சுப்பிரமணியன் ஆகியோர் த் தொடங்கி வைத்தனர்.
இந்தியாவின் முதல் 'டிஜிட்டல் சென்சஸ்': கடந்த 1872-ஆம் ஆண்டு இந்தியாவில் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு த் தொடங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தற்போது நடைபெற உள்ள கணக்கெடுப்பானது நாட்டின் 16-ஆவது தொடர் மக்கள் தொகை கணக்கெடுப்பாகும். மேலும், இந்தியா சுதந்திரம் அடைந்ததற்குப் பிறகு நடைபெறும் 8-ஆவது தேசியக் கணக்கெடுப்பு இதுவாகும்.
இம்முறை வரலாற்றிலேயே முதன்முறையாக ஒட்டுமொத்த உள்கட்டமைப்பும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு, 'டிஜிட்டல் சென்சஸ்' முறையில் இக்கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. எனவே, கணக்கெடுப்புப் பணிகளுக்காக இல்லங்களுக்கு வரும் அரசுப் பணியாளர்களுக்குப் பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பு நல்கி, தங்களது துல்லியமான சுய விவரங்களை வழங்கி தேசத்தின் முதல் டிஜிட்டல் சென்சஸில் பங்கெடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இப்பயிற்சி முகாமில், சென்னையிலுள்ள மக்கள் தொகை இயக்குநரகத்தின் (Directorate of Census Operations) இணை இயக்குநர் S.சின்னத்துரை, உதவி இயக்குநர் மஞ்சுஷா மற்றும் புள்ளியியல் ஆய்வாளர் ராகவேந்திரா ராஜ்புத் ஆகியோர் கலந்துகொண்டு நெல்லை மாவட்ட அதிகாரிகளுக்கு அதிநவீன உள்கட்டமைப்புப் பயிற்சிகளை வழங்கி வருகின்றனர்.
இந்த டிஜிட்டல் கணக்கெடுப்பில், கணக்கெடுப்பாளர்கள் ஒவ்வொருவரும் தங்களது மொபைல் போனில் (Mobile Phone) இதற்கெனப் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள மத்திய அரசின் சென்சஸ் செயலியில் (Mobile App) விவரங்களை நேரடியாகப் பதிவேற்றம் செய்ய உள்ளனர். முதற்கட்டமாக வீடுகளின் உள்கட்டமைப்பு நிலைமை, குடும்பத் தலைவர் விவரம், அடிப்படை மற்றும் அத்தியாவசியத் தேவைகளான குடிநீர், கழிப்பிடம், வடிகால் வசதிகள், குடும்பத்திற்குரிய சொத்து விவரங்கள் (தொலைக்காட்சி, கார், இருசக்கர வாகனம், கணினி, மடிக்கணினி) மற்றும் குடும்பத்தினர் பிரதானமாக உட்கொள்ளும் உணவு வகைகள் குறித்த புள்ளிவிவரங்கள் அனைத்தும் டிஜிட்டல் முறையில் சேகரிக்கப்பட உள்ளன.
இந்நிகழ்ச்சியில், தேர்தல் வட்டாட்சியர் முருகன், மாவட்டத்தின் அனைத்து வட்டார வட்டாட்சியர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், நகராட்சி ஆணையாளர்கள் மற்றும் இதர முக்கிய அரசு உயர் அதிகாரிகள் பலர் தங்களது துறை சார்ந்த பிரதிநிதிகளுடன் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தென்காசியில் அமைச்சர் டி.கே.பிரபு திடீர் ஆய்வு: 18 கற்குவாரிகளை மூட அதிரடி உத்தரவு!
திங்கள் 25, மே 2026 5:37:59 PM (IST)

நெல்லையில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை : கள்ளக்காதலனுடன் தாய் கைது!
ஞாயிறு 24, மே 2026 8:46:25 PM (IST)

காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்: 3 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம்!
சனி 23, மே 2026 8:56:35 AM (IST)

தேசிய டிஜிட்டல் கால்நடை இயக்கம்: கால்நடைகளின் விபரங்களைப் புதுப்பிக்க ஆட்சியர் அறிவுறுத்தல்!
வெள்ளி 22, மே 2026 5:47:46 PM (IST)

கொக்கிரகுளத்தில் புதிய ஆதார் சேவை மையம் : ஆட்சியர் இரா.சுகுமார் திறந்து வைத்தார்
வியாழன் 21, மே 2026 4:38:35 PM (IST)

நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீண்..? மண்டல மேலாளர் மறுப்பு; 2 பேர் பணிநீக்கம்!
வியாழன் 21, மே 2026 11:20:26 AM (IST)


