» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடி துறைமுகத்தில் வியாபாரிகள் குவிந்தனர் : ஒரே நாளில் ரூ.30 கோடிக்கு மீன் வர்த்தகம்!
செவ்வாய் 16, ஜூன் 2026 8:24:56 AM (IST)

தமிழகக் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் 61 நாட்கள் அமலில் இருந்த மீன்பிடித் தடைக்காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்ட விசைப்படகு மீனவர்கள் நேற்று அதிகாலையில் கடலுக்குச் சென்றனர். கரை திரும்பிய படகுகளில் மீன்கள் வரத்து அதிகமாக இருந்ததால் வியாபாரிகள் போட்டி போட்டு ஏலம் எடுத்தனர்.
தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983-ன் கீழ், திருவள்ளூர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி வரை ஆண்டுதோறும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை மீன் இனப்பெருக்க கால தடைக்காலமாக அமல்படுத்தப்படுகிறது. அதன்படி, தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் உள்ள 272 விசைப்படகுகள், வேம்பாரில் 33 படகுகள், தருவைகுளத்தில் 280 படகுகள் என மொத்தம் 585 விசைப்படகுகள் கடந்த 61 நாட்களாகக் கரையில் நிறுத்தப்பட்டிருந்தன. இக்காலகட்டத்தில் மீனவர்கள் தங்களது படகுகளைப் பழுதுநீக்குதல், வலைகளைச் சீரமைத்தல் போன்ற பணிகளை மேற்கொண்டனர்.
தடைக்காலம் முடிவடைந்ததை அடுத்து, நேற்று அதிகாலை 4 மணியளவில் தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மொத்தம் 221 விசைப்படகுகள் ஐஸ் கட்டிகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களுடன் கடலுக்குள் சென்றன. இந்த மீனவர்கள் நேற்று இரவு 8 மணி முதல் மீன்களுடன் கரைக்கு வரத் தொடங்கினர்.
கேரளா வியாபாரிகளுடன் போட்டி - ரூ.30 கோடி வர்த்தகம்:
மீனவர்களின் வலைகளில் ஊழி, விளமீன், சாளை, கீரிச்சாளை, பாறை உள்ளிட்ட மீன்கள் அதிக அளவில் பிடிபட்டிருந்தன. தற்போது கேரளப் பகுதியில் மீன்பிடித் தடைக்காலம் தொடங்கியுள்ளதால், அம்மாநில வியாபாரிகளும் தூத்துக்குடி விசைப்படகுத் துறைமுகத்தில் பெருமளவில் குவிந்தனர்.
குறிப்பாகத் தருவைகுளம் பகுதியில் உள்ள உள்ளூர் மீன் வியாபாரிகள், கேரள வியாபாரிகளுடன் போட்டி போட்டுக் கொண்டு மீன்களை ஏலம் எடுத்தனர். இதில் சுமார் 2 கிலோ எடையுள்ள மீன்கள் ரூ.1,000 முதல் ரூ.1,500 வரையிலும், 15 கிலோ முதல் 20 கிலோ வரை எடையுள்ள பெரிய பாறை மற்றும் ஊழி மீன்கள் ரூ.15,000 முதல் ரூ.20,000 வரையிலும் ஏலம் போயின. சிறு வியாபாரிகள் சாளை மற்றும் சிறிய ரக ஊழி மீன்களை ஒரு கூடை ரூ.1,500 முதல் ரூ.2,000 வரை ஏலத்தில் எடுத்தனர்.
இந்தக் காரசாரமான ஏலத்தால் நேற்று இரவு 9 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரை மீன்பிடித் துறைமுகப் பகுதி கடுமையான பரபரப்புடன் காணப்பட்டது. நேற்று ஒரே நாளில் மட்டும் வெறும் 5 மணி நேரத்தில் சுமார் ரூ.30 கோடி வரை மீன் வர்த்தகம் நடைபெற்றிருக்கலாம் என விசைப்படகு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். நீண்ட நாட்களுக்குப் பிறகு நல்ல லாபம் கிடைத்துள்ளதால் விசைப்படகு உரிமையாளர்களும், மீன்பிடித் தொழிலாளர்களும் பெரும் மகிழ்ச்சியில் நனைந்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசாணைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும்: தென்காசி வழக்கில் உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
வெள்ளி 19, ஜூன் 2026 5:16:31 PM (IST)

மூலைக்கரைப்பட்டி தான்தோன்றி குளம் தூர் வாரும் பணி துவக்கம்: விவசாயிகள் பெருமகிழ்ச்சி!!
வெள்ளி 19, ஜூன் 2026 3:43:39 PM (IST)

நெல்லை மாவட்டத்தில் 11 மையங்களில் நீட் மறுதேர்வு: கடுமையான கட்டுப்பாடுகள் அறிவிப்பு!
வெள்ளி 19, ஜூன் 2026 11:41:46 AM (IST)

நெல்லை எக்ஸ்பிரஸை நிறுத்தி பெண் பயணியிடம் நகை பறிப்பு : ஆட்டோ ஓட்டுநர் கைது!
வியாழன் 18, ஜூன் 2026 5:54:36 PM (IST)

மருத்துவமனை லிஃப்ட்டில் இளம்பெண்ணிடம் அத்துமீறிய ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கைது!
வியாழன் 18, ஜூன் 2026 8:27:23 AM (IST)

ஹெலிகாப்டரில் வந்த நீட் மறுதேர்வு வினாத்தாள்கள்: 24 மணி நேர துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!
வியாழன் 18, ஜூன் 2026 7:53:47 AM (IST)



ஆமா ஆமாJun 17, 2026 - 07:19:11 AM | Posted IP 172.7*****