» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லை எக்ஸ்பிரஸை நிறுத்தி பெண் பயணியிடம் நகை பறிப்பு : ஆட்டோ ஓட்டுநர் கைது!

வியாழன் 18, ஜூன் 2026 5:54:36 PM (IST)



சென்னை அருகே சிக்னல் விளக்கை துணியால் மறைத்துக் கட்டி, நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலை நடுவழியில் நிறுத்திப் பெண் பயணியிடம் தங்க நகையைப் பறித்துச் சென்ற ஆட்டோ ஓட்டுநரைத் ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னையில் இருந்து நெல்லைக்கு தினமும் இரவு 8:00 மணியளவில் நெல்லை சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த 15-ஆம் தேதி வழக்கம் போல் இந்த ரயில் சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டுச் சென்றது. ரயில் சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூர் - பொத்தேரி ரயில் நிலையங்கள் இடையே சென்று கொண்டிருந்த போது, திடீரென சிக்னல் கோளாறு காரணமாக நடுவழியில் நின்றது. அதே நேரத்தில் எதிரே வந்த மற்றொரு ரயிலும் சிக்னல் தெரியாததால் மெதுவாக வந்தது.

இது குறித்துத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீசார் ஆய்வு செய்த போது, இரு தண்டவாளங்களிலும் இருந்த சிக்னல் கம்பங்களில், பச்சை நிற விளக்கு எரியும் பகுதி மட்டும் துணியால் கட்டப்பட்டு மறைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சிக்னல் விளக்கை துணியால் மறைத்து ரயிலை நிற்கச் செய்து, பின்னர் ரயிலில் ஏறி பயணிகளிடம் கொள்ளையடிக்கும் நோக்கில் இந்த வினோத திருட்டுத் திட்டம் தீட்டப்பட்டது போலீசாருக்குத் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து, அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி (CCTV) கேமரா காட்சிகளை ஆய்வு செய்து தாம்பரம் ரயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில், சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த குமரேசன் என்பவர் இந்தத் துணிகரச் செயலில் ஈடுபட்டது உறுதியானது.

பகல் நேரங்களில் ஆட்டோ ஓட்டுநராக வேலை பார்த்து வரும் இவர், இரவு நேரங்களில் ரயில் பயணிகளைக் குறிவைத்து, ரயில்களைச் சிக்னல் மூலம் நிறுத்தி உடைமைகளைப் பறிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். கைது செய்யப்பட்ட குமரேசன் மீது ஏற்கனவே கொருக்குப்பேட்டை, சென்னை சென்ட்ரல், ராயபுரம் உள்ளிட்ட 6 காவல் நிலையங்களில் பல்வேறு வழிப்பறி வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்துத் தாம்பரம் ரயில்வே போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory