» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

சப் இன்ஸ்பெக்டரை அரிவாளால் வெட்டிய 2 ரவுடிகள் கைது: தூத்துக்குடியில் பரபரப்பு!

வியாழன் 18, ஜூன் 2026 10:32:12 AM (IST)

தூத்துக்குடியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சப் இன்ஸ்பெக்டரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோட முயன்ற 2 பிரபல ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீசாரிடம் தப்ப முயன்றபோது அவர்கள் இருவருக்கும் கை மற்றும் கால் முறிந்தது. 

தூத்துக்குடி தாளமுத்து நகர் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜா மற்றும் தலைமை காவலர் மீனாட்சி சுந்தரம் ஆகியோர் அம்பேத்கர் நகர் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, அந்த பகுதியில் இரண்டு வாலிபர்கள் நடுரோட்டில் நின்று கொண்டு பயங்கர ஆயுதங்களுடன் தகராறில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அவர்களைப் பிடிப்பதற்காக சப் இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜா மற்றும் போலீசார் முயன்ற போது, அந்த வாலிபர்கள் இருவரும் போலீசாரை நோக்கி அரிவாளைக் காட்டி மிரட்டல் விடுத்தனர். இருப்பினும், சுதாரித்துக் கொண்ட போலீசார் அவர்களைப் மடக்கிப் பிடிக்க மீண்டும் முன்னேறினர். அப்போது, அந்த ரவுடிகளில் ஒருவன் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சப் இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜாவின் கையில் வெட்டினான். இதில் அவருக்குக் காயம் ஏற்பட்டது.

போலீசாரை வெட்டிவிட்டு அந்த இடத்தை விட்டு வாலிபர்கள் இருவரும் தப்பியோட முயன்றனர். அப்போது, இருள் சூழ்ந்த பகுதியில் வேகமாக ஓடிய அவர்கள், எதிர்பாராதவிதமாக அங்குள்ள ஒரு பள்ளத்தில் நிலைதடுமாறி விழுந்தனர். பள்ளத்தில் விழுந்ததில் வாலிபர்கள் இருவருக்கும் கை மற்றும் கால்களில் பலத்த எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து, போலீசார் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பிடிபட்டவர்கள் தூத்துக்குடி தாளமுத்துநகரைச் சேர்ந்த மாதவன் மகன் ஜெயசூர்யா (20) மற்றும் கிழக்கு காமராஜ் நகரைச் சேர்ந்த முருகன் மகன் கார்த்திக் என்ற 'நண்டு' கார்த்திக் (20) என்பது தெரியவந்தது. இவர்கள் இருவர் மீதும் தாளமுத்து நகர் மற்றும் வடபாகம் காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதும், இவர்கள் அந்த பகுதியின் பிரபல ரவுடிகள் என்பதும் உறுதி செய்யப்பட்டது.

இச்சம்பவம் குறித்து வடபாகம் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் வேல்ராஜ் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி, சூர்யா மற்றும் கார்த்திக் ஆகிய இருவரையும் கைது செய்தார். போலீசாரையே ரவுடிகள் வெட்டிய இச்சம்பவம் தூத்துக்குடி தாளமுத்து பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து

ஒருவன்Jun 18, 2026 - 02:12:08 PM | Posted IP 104.2*****

துப்பாக்கியால் சுட வேண்டியது தானே

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory