» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தூத்துக்குடி அனல் மின் நிலைய வளாகத்தில் பிளக்ஸ் பேனர்கள் வைக்கத் தடை: நிர்வாகம் எச்சரிக்கை!

வெள்ளி 19, ஜூன் 2026 5:53:18 PM (IST)

தூத்துக்குடி அனல் மின் நிலைய வளாகம் மற்றும் அதன் அணுகு சாலைப் பகுதிகளில் தனிநபர்கள் அல்லது அமைப்புகள் அனுமதியின்றி பேனர்கள், பிளக்ஸ் பலகைகள் மற்றும் கொடிக்கம்பங்கள் அமைப்பதற்கு அனல் மின் நிலைய நிர்வாகம் தடை விதித்துள்ளது.

இது குறித்துத் தூத்துக்குடி அனல் மின் நிலையத் தலைமைப் பொறியாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பு விபரம் வருமாறு: தமிழ்நாடு மின் உற்பத்தி கழகத்தின் கீழ் செயல்படும் தூத்துக்குடி அனல் மின் நிலையமானது, மாநிலத்தின் மிக முக்கிய உள்கட்டமைப்பு  நிறுவனமாக விளங்கி வருகிறது. 

மத்திய மற்றும் மாநிலப் பாதுகாப்பு முகமைகளின் அறிவுறுத்தலின்படி, இப்பகுதியில் கடுமையான பாதுகாப்பு மற்றும் அணுக்கல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் அமலில் உள்ளன. இத்தகைய சூழ்நிலையில், உரிய அதிகாரிகளின் முன் அனுமதியின்றி வளாகச் சுவர்கள், நுழைவாயில்கள் மற்றும் அணுகு சாலைகளில் பேனர்கள், பிளக்ஸ் பலகைகள், விளம்பரப் பலகைகள், சுவரொட்டிகள் மற்றும் கொடிக்கம்பங்களை அமைப்பது நிறுவனத்தின் பாதுகாப்பு, கண்காணிப்புக் கேமராக்களின் செயல்பாடு, தீயணைப்பு மற்றும் அவசரகால வாகனங்களின் இயக்கத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக அமைகிறது.

தொழிற்சாலைகள் சட்டம் 1948, தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1998, தமிழ்நாடு நில ஆக்கிரமிப்புச் சட்டம் 1905 மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா 2023 ஆகிய சட்டங்களின்படி, பொதுப் பாதுகாப்புக்கும் பொதுமக்களின் சுதந்திர நடமாட்டத்திற்கும் இடையூறு விளைவிக்கும் இத்தகைய செயல்கள் குற்றமாகக் கருதப்படும்.

எனவே, இந்த அறிவிப்பை மீறிச் செயல்படுபவர்களின் காட்சி அமைப்புகள் மற்றும் பேனர்கள் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி உடனடியாக அகற்றப்படும். அதற்கான முழுச் செலவினங்களும் சம்பந்தப்பட்டவர்களிடமிருந்தே வசூலிக்கப்படும். மேலும், மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை மூலமாகக் குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தூத்துக்குடி அனல் மின் நிலைய நிர்வாகம் திட்டவட்டமாக எச்சரித்துள்ளது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory