» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கன்னியாகுமரி – களியக்காவிளை சாலையைச் செப்பனிட விஜய் வசந்த் எம்.பி கோரிக்கை!

திங்கள் 29, ஜூன் 2026 9:23:31 PM (IST)

பழுதடைந்து காணப்படும் கன்னியாகுமரி – களியக்காவிளை நெடுஞ்சாலை மற்றும் பேயன்குழி சந்திப்பு – வடக்கு நுள்ளிவிளை இணைப்புச் சாலைகளை உடனடியாகச் செப்பனிட்டு விபத்துகளைத் தவிர்க்க வேண்டும் எனக் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், மாவட்ட ஆட்சியர் மற்றும் நெடுஞ்சாலைக் கோட்டப் பொறியாளருக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.

தேசிய நெடுஞ்சாலையாக இருந்த கன்னியாகுமரி – களியக்காவிளை சாலை தற்போது மாநில நெடுஞ்சாலையாக மாற்றப்பட்டுள்ளது. இந்தச் சாலையைச் செப்பனிட கடந்த 2022 ஆம் ஆண்டு மத்திய அரசிடமிருந்து 14.99 கோடி ரூபாய் பெற்றுத் தரப்பட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தொடர்ந்து 2024 ஆம் ஆண்டில், நான்கு வழிச்சாலைப் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளதால் இச்சாலை மாநில அரசிடம் ஒப்படைக்கப்படும் எனக் கூறி மத்திய அரசு நிதி ஒதுக்க மறுத்தது. எனினும், தொடர் முயற்சியால் 2024 ஆம் ஆண்டில் 14.87 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.

மாநில அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் கண்காணிப்பில் ஒப்பந்தக்காரர் மூலம் பழுதடைந்த 12 கிலோமீட்டர் தூரம் செப்பனிடப்பட்டது. தற்போது இச்சாலை மீண்டும் பழுதடைந்துள்ளது. தற்போதைய பழுதுகள் அனைத்தும் குறைபாடு பொறுப்புக் காலத்திற்குள் (Defect Liability period) வருவதால், சம்பந்தப்பட்ட ஒப்பந்தக்காரர் மூலமாகவே இப்பழுதுகளைச் செப்பனிட மாவட்ட நிர்வாகம் ஆவன செய்ய வேண்டும் என விஜய் வசந்த் கேட்டுக்கொண்டுள்ளார். மீதமுள்ள இதரப் பகுதிகளில் நெடுஞ்சாலைத் துறை நேரடியாகப் பழுதுகளைச் சீரமைக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

நுள்ளிவிளையில் ரயில்வே மேம்பாலப் பணிகள் நடைபெறுவதால், தோட்டியோடு – திங்கள் நகர் பிரதான சாலை தற்காலிகமாகத் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் நாகர்கோவில் செல்லும் வாகனங்கள் பேயன்குழி சந்திப்பிலிருந்து இரட்டை கரை சானல் வழியாகச் சென்று வடக்கு நுள்ளிவிளையில் புதிய நான்கு வழிச்சாலையைச் சந்திக்கின்றன. மாற்றுப் பாதையாகப் பயன்படுத்தப்படும் இச்சாலை தற்போது மிகக் கடுமையாகப் பழுதடைந்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினரின் வேண்டுகோளை ஏற்று இச்சாலையில் தற்காலிகமாகக் குழிகள் நிரப்பப்பட்ட போதிலும், வாகனப் போக்குவரத்து அதிகமாக உள்ளதால் மீண்டும் சாலை பழுதடைந்துள்ளது. மழைக்காலங்களில் இங்கு மண்சரிவு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. நுள்ளிவிளை மேம்பாலப் பணிகள் முடிந்து மக்கள் பயன்பாட்டிற்குத் திறக்கப்படும் வரை பொதுமக்கள் இந்த மாற்றுப் பாதையைத்தான் பயன்படுத்த வேண்டும் என்பதால், பேயன்குழி – வடக்கு நுள்ளிவிளை சாலையை முழுமையாகச் செப்பனிட்டு, நிரந்தரமான தார் அல்லது கான்க்ரீட் சாலை அமைக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory