» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
குமரியில் நாஞ்சில் நாட்டு உணவுத் திருவிழா : அமைச்சர் செ.ராஜேஷ் குமார் துவக்கி வைத்தார்!
சனி 25, ஜூலை 2026 5:11:49 PM (IST)

கன்னியாகுமரி காமராஜர் மணிமண்டபம் அருகில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இரண்டு நாட்கள் நடைபெறும் 'நாஞ்சில் நாட்டு உணவுத் திருவிழாவை' சுற்றுலாத்துறை அமைச்சர் செ.ராஜேஷ் குமார் துவக்கி வைத்தார்.
கன்னியாகுமரியில் இன்று (25.07.2026) நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தலைமையில், கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் வ.விஜய் வசந்த் முன்னிலையில் சுற்றுலாத்துறை அமைச்சர் செ.ராஜேஷ் குமார் குத்துவிளக்கேற்றி உணவுத் திருவிழாவைத் தொடங்கி வைத்தார்.
விழாவைத் தொடங்கி வைத்துப் பேசிய சுற்றுலாத்துறை அமைச்சர் செ.ராஜேஷ் குமார்: "தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவுகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் கொங்குநாடு உணவுத் திருவிழா, செட்டிநாடு உணவுத் திருவிழா, நாஞ்சில் நாட்டுப் பாரம்பரிய உணவு உட்படப் பல்வேறு மாவட்டங்களின் உணவு வகைகளைக் கொண்டு ஒவ்வொரு மாதமும் தனித்தன்மையுடன் கூடிய உணவுத் திருவிழாக்கள் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில், கன்னியாகுமரி மாவட்டத்தின் பாரம்பரிய உணவு வகைகளைப் பிரதிபலிக்கும் வகையில் காமராஜர் மணிமண்டபம் அருகில் இன்று (25.07.2026) மற்றும் நாளை (26.07.2026) ஆகிய இரண்டு நாட்கள் ஹோட்டல் தமிழ்நாடு சார்பில் இந்த உணவுத் திருவிழா நடைபெறுகிறது. இதேபோன்று திருச்சி ராக்போர்ட் மற்றும் மதுரை பாண்டியன் ஹோட்டல் வளாகங்களிலும் நாஞ்சில் நாட்டு உணவுத் திருவிழா நடத்தப்படுகிறது" என்று தெரிவித்தார்.
இந்த உணவுத் திருவிழாவில் பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்ற அவியல், பல்வேறு மீன் குழம்பு வகைகள், தேங்காய் மற்றும் கடல் உணவுகள் பலாப்பழ பாயசம், அட பிரதமன் கொல்லம் நெத்திலி பொரியல், நாஞ்சில் ஈரல் வறுவல், கிள்ளியூர் மரவள்ளி போண்டா தேன்குழல், மோதகம், அதிரசம் உள்ளிட்ட பாரம்பரிய இனிப்பு வகைகள்வழங்குவதற்குச் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
"நாஞ்சில் நாட்டு உணவு மரபைப் பாதுகாத்து, அதன் தனித்துவமான சுவையை உலகறியச் செய்யும் முயற்சியாக இந்த உணவுத் திருவிழா அமைகிறது. எனவே பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் உணவுப் பிரியர்கள் அனைவரும் இதில் கலந்துகொண்டு நாஞ்சில் நாட்டின் அசல் பாரம்பரியச் சுவைகளை சுவைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என அமைச்சர் அழைப்பு விடுத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட சுற்றுலா அலுவலர் காமராஜ், தமிழ்நாடு ஹோட்டல் பொதுமேலாளர் நவீன்கார்த்திக், மண்டல கணக்கு அலுவலர் ராஜேஸ்வரி, மாதவன் உட்பட அரசு அலுவலர்கள் மற்றும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கலந்துகொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-வது இடமா? – அன்புமணி கண்டனம்!
சனி 25, ஜூலை 2026 11:25:26 AM (IST)

நாங்குநேரி வட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள்: நெல்லை மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் ஆய்வு!
வெள்ளி 24, ஜூலை 2026 5:17:33 PM (IST)

தாம்பரம் - தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!
வெள்ளி 24, ஜூலை 2026 10:25:18 AM (IST)

பழைய குற்றாலத்தில் சட்டவிரோத வாகனக் கட்டண வசூல் : ஆட்சியருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!
வெள்ளி 24, ஜூலை 2026 8:44:06 AM (IST)

வரதட்சணை கொடுமையால் இளம் பெண் தற்கொலை: கல்லூரிப் பேராசிரியர் மற்றும் அவரது தாய் கைது!
வெள்ளி 24, ஜூலை 2026 7:50:01 AM (IST)

நலவாழ்வுச் சங்கத்தில் பல்வேறு பணியிடங்கள்: விண்ணப்பிக்க ஆட்சியர் ஆனந்த் மோகன் அழைப்பு!
வியாழன் 23, ஜூலை 2026 5:43:08 PM (IST)


