» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
விஏஓ லூர்து பிரான்சிஸ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை உறுதி - உயர்நீதிமன்றம் தீர்ப்பு!
வெள்ளி 31, ஜூலை 2026 4:37:34 PM (IST)

முறப்பநாடு விஏஓ லூர்து பிரான்சிஸ் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்குக் கீழமை நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வட்டம், முறப்பநாடு கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலராகப் பணியாற்றியவர் லூர்து பிரான்சிஸ். தாமிரபரணி ஆற்றில் சட்டவிரோதமாக நடைபெற்று வந்த மணல் கொள்ளை குறித்து அதிகாரிகளிடம் தொடர்ந்து புகார் அளித்ததால், கடந்த ஏப்ரல் 25-ஆம் தேதி தனது அலுவலகத்திலேயே வைத்து கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
இக்கொலை வழக்கு தொடர்பாக ராமசுப்பிரமணியன் மற்றும் மாரிமுத்து ஆகிய இருவரைக் காவல்துறையினர் கைது செய்தனர். வழக்கு விசாரணையின் முடிவில், தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.
தூத்துக்குடி நீதிமன்றத்தின் தண்டனையை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த நீதிபதிகள் ஆனந்த் வெங்கடேஷ் மற்றும் ராமகிருஷ்ணன் அடங்கிய அமர்வு, கீழமை நீதிமன்றத்தின் ஆயுள் தண்டனைத் தீர்ப்பை உறுதி செய்து உத்தரவிட்டது.
மேலும், இக்கொலை வழக்கில் புலனாய்வு அதிகாரிகள், அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் மற்றும் விசாரணை நீதிபதி ஆகியோர் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயல்பட்டு, சம்பவம் நடந்த 5 மாதங்களுக்குள்ளேயே விசாரணை மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளைச் சிறப்பாக நிறைவு செய்ததற்காக நீதிபதிகள் தங்களது பாராட்டைப் பதிவு செய்தனர்.
இதுபோன்ற முக்கியக் குற்றவியல் வழக்குகளில் காலதாமதமின்றி விரைவாக விசாரணை நடைபெற வேண்டும் என வலியுறுத்திய நீதிபதிகள்: காவல்துறை தலைமை இயக்குநர் (DGP) மற்றும் வழக்குத் தொடரும் துறையுடன் ஆலோசித்து, காலக்கெடு அடிப்படையிலான திட்டவட்டமான நடைமுறைகளை வகுத்துச் சுற்றறிக்கை வெளியிடத் தமிழகத் தலைமைச் செயலருக்கு வழிகாட்டுதல்கள் வழங்க வேண்டும் எனக் கருத்து தெரிவித்தனர்.
எதிர்காலத்திலும் இதுபோன்ற தீவிர குற்ற வழக்குகள் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் முடிக்கப்படும் என்ற நம்பிக்கையையும் உயர்நீதிமன்றம் தனது உத்தரவில் பதிவு செய்துள்ளது.
மக்கள் கருத்து
ஒருவன்Aug 1, 2026 - 11:40:15 AM | Posted IP 172.7*****
தூக்குத்தண்டனை கொடுங்கடா, ஆயுத்தண்டனை கொடுத்து கொலை குற்றவாளிகளை சோறு போட்டு வளர்க்கணுமா? கொலை குற்றவாளிகளை தூக்குல தொங்க விட்டால்தான் அடுத்த அடுத்த கொலைகள் நடக்க வாய்ப்பிருக்காது.
மேலும் தொடரும் செய்திகள்

காரில் 3½ கிலோ கஞ்சா கடத்தல்: சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் உட்பட 3 பேர் கைது!
சனி 1, ஆகஸ்ட் 2026 12:35:50 PM (IST)

தாமிரபரணி - நம்பியாறு இணைப்புத் திட்டம்: நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்க சிறப்பு முகாம்
சனி 1, ஆகஸ்ட் 2026 12:10:21 PM (IST)

காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தை அணுகுவதே ஒரே வழி: நெல்லையில் அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி!
சனி 1, ஆகஸ்ட் 2026 11:55:03 AM (IST)

குற்றாலத்தில் கோலாகலமாகத் தொடங்கியது சாரல் திருவிழா: அமைச்சர்கள் பங்கேற்பு!
வெள்ளி 31, ஜூலை 2026 5:38:49 PM (IST)

காரையார் சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை திருவிழா: கட்டுப்பாடுகள் அறிவிப்பு
வெள்ளி 31, ஜூலை 2026 10:55:45 AM (IST)

பாஜக பெண் கவுன்சிலர் விஷம் குடித்து தற்கொலை: குடும்பத் தகராறில் விபரீதம்!
வெள்ளி 31, ஜூலை 2026 8:30:28 AM (IST)



PublicAug 1, 2026 - 04:30:58 PM | Posted IP 172.7*****