» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

போதை பழக்கத்திலிருந்து விடுபட பெற்றோருக்குக் கடிதம் எழுதிய மாணவர்கள்: ஆட்சியர் பாராட்டு!

செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 4:03:00 PM (IST)

StudentsCollector.jpg

போதை பழக்கத்திற்கு ஆளான பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு அப்பழக்கத்திலிருந்து விடுபட வேண்டுகோள் விடுத்துக் கடிதம் எழுதிய மாணவர்களைத் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் நேரில் சந்தித்துப் பாராட்டினார்.

முன்னீர்பள்ளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்வை மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் பார்வையிட்டு, மாணவர்களுக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

தமிழ்நாடு அரசு சார்பில் போதைப் பொருட்கள் ஒழிப்பு தொடர்பாகப் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, பள்ளிக்கல்வித்துறை சார்பில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 1,485 அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 2.80 லட்சம் மாணவர்கள் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர்.

அதன் தொடர்ச்சியாக, போதைப் பழக்கத்திற்கு ஆளான பெற்றோர் அல்லது உறவினர்களுக்கு அப்பழக்கத்தைக் கைவிடுமாறு வேண்டுகோள் விடுத்து 25,000 மாணவர்கள் கடிதம் எழுதி அனுப்பும் விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

"உங்களது உடல்நலமும், எங்களது எதிர்காலமும் முக்கியம்; போதைப் பழக்கத்தைக் கைவிட்டு எங்களுக்காக நலமுடன் வாழுங்கள்” என்ற உணர்வுடன் மாணவர்கள் எழுதிய அக்கடிதங்களைத் தபால் மூலம் அனுப்பும் நிகழ்வை ஆட்சியர் பார்வையிட்டார். போதைப் பழக்கத்தால் ஏற்படும் உடல்நலம் மற்றும் குடும்பப் பாதிப்புகள் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், குடும்பத்தில் உள்ளவர்களுக்கு அன்பும் ஆதரவும் அளிக்கும் மனப்பான்மையை உருவாக்கவுமே இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சிவகுமார், மாவட்டக் கல்வி அலுவலர் (பொறுப்பு) மற்றும் முன்னீர்பள்ளம் அரசு மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் மோசஸ், ஆசிரியர்கள், மாணவ-மாணவியர் பலர் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory