» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மதுபோதை தகராறில் வெறிச்செயல்: வாலிபரை வெட்டிக்கொன்ற 3 சிறுவர்கள் சிக்கினர்!

செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 4:52:09 PM (IST)

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபரைச் சரமாரியாக வெட்டிக்கொலை செய்த 3 சிறுவர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சங்கரன்கோவில் சங்குபுரம் தெரு பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் என்பவரது மகன் மாரியப்பன். சுமைத்தூக்கும் தொழிலாளியான இவருக்கு அடிக்கடி மது அருந்தும் பழக்கம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. திரு.வி.க. நகர் பகுதியிலுள்ள ஐயர் தோப்புப் பகுதியில் மாரியப்பன் முகம் மற்றும் பல்வேறு இடங்களில் வெட்டுக் காயங்களுடன் சடலமாகக் கிடப்பதாகச் சங்கரன்கோவில் நகரக் காவல் நிலையத்திற்குத் தகவல் கிடைத்தது.

தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், உடலைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சங்கரன்கோவில் சரகக் காவல் துணை கண்காணிப்பாளர் செங்கோட்டுவேலன் மற்றும் நகரக் காவல் ஆய்வாளர் பாலமுருகன் ஆகியோர் தலைமையிலான காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

கடந்த 23.08.2026 அன்று இரவு, மாரியப்பன் 3 சிறுவர்களுடன் (வயது 17, 16, 14) திரு.வி.க. நகர் ஐயர் கிணறு பகுதியில் மது அருந்தச் சென்றுள்ளார். மது அருந்துவதற்குத் தேவையான குடிநீர் பாட்டில், கிளாஸ் மற்றும் 'சைட் டிஷ்' வாங்கி வரச் சொல்லிச் சிறுவர்களை மாரியப்பன் அனுப்பி வைத்துள்ளார். சிறுவர்கள் தாமதமாக வந்ததால் ஆத்திரமடைந்த மாரியப்பன் அவர்களைச் சரமாரியாகத் தாக்கியுள்ளார்.

போதை தலைக்கேறிய நிலையில், "எங்களை ஏன் அடித்தாய்?" எனக் கேட்டுச் சிறுவர்கள் மாரியப்பனுடன் தகராறில் ஈடுபட்டுத் திரும்பத் தாக்கியுள்ளனர். தொடர்ந்து 3 சிறுவர்களும் சேர்ந்து, தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மாரியப்பனைச் சரமாரியாக வெட்டிக்கொலை செய்துவிட்டு உடலை அங்கேயே போட்டுவிட்டுத் தப்பிச் சென்றுவிட்டனர்.

இக்கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், சம்பந்தப்பட்ட 3 சிறுவர்களையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இளைஞர் ஒருவரை 3 சிறுவர்கள் சேர்ந்து வெட்டிக்கொலை செய்த சம்பவம் சங்கரன்கோவில் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory