» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

காவல் நிலையத்தில் வாலிபர் தற்கொலை முயற்சி : தலைமை காவலர் உள்பட 2பேர் சஸ்பெண்ட்!

சனி 22, ஆகஸ்ட் 2026 11:31:58 AM (IST)

கூடங்குளம் காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட வாலிபர் விஷம் குடித்துத் தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தில், பணியில் அலட்சியமாகச் செயல்பட்டதாக தலைமை காவலர் உட்பட இரண்டு காவல்துறையினரை நெல்லை மாவட்ட எஸ்பி அதிரடியாகச் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள ஆவாரைகுளத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் ரமேஷ்குமார் (32). இவர் தனது உறவினர் ஒருவரின் மகளைக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் இருவருக்கும் அண்ணன்-தங்கை உறவுமுறை என்பதால் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவிக்கவே, இருவரும் அண்மையில் பிரிந்துவிட்டனர். 

இதனால் ரமேஷ்குமார் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். நேற்று முன்தினம் மாலை 7 மணியளவில் ஆவாரைகுளத்தில் இருந்து ரமேஷ்குமார் பைக்குகளில் கூடங்குளத்திற்கு வந்துள்ளார். அப்போது வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், அவர் மது போதையில் இருந்தாரா எனப் பரிசோதிப்பதற்காகக் கூடங்குளம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

காவல் நிலையத்தில் சோதனை செய்யத் தயாரிப்பு பணிகள் நடந்தபோது, யாரும் எதிர்பாராத விதமாக ரமேஷ்குமார் தனது பையில் மறைத்து வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தையெடுத்துக் குடித்துள்ளார். கண்டுகொண்ட காவல்துறையினர் அவரை உடனடியாகக் கூடங்குளம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி அளித்தனர். 

பின்னர் மேல் சிகிச்சைக்காக நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காவல் நிலையத்தில் வாலிபர் விஷம் குடித்த சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. 

இதுகுறித்துச் சமூக வலைதளங்களில் செய்திகள் வேகமாகப் பரவியதைத் தொடர்ந்து, நெல்லை மாவட்ட எஸ்பி விஷ்வேஷ் பாலசுப்பிரமணிய சாஸ்திரி தீவிர விசாரணை நடத்தினார். விசாரணையில், வாலிபரை முறையாகச் சோதனை செய்யாமல் பணியில் அலட்சியமாகச் செயல்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து தலைமை காவலர் சிவகுமார், காவலர் வேல்துரை ஆகிய இருவரையும் சஸ்பெண்ட் செய்து எஸ்பி உத்தரவிட்டார். இச்சம்பவம் தொடர்பாகக் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory