» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடியில் பைக் மீது லாரி மோதல்; என்டிபிஎல் ஊழியர் பலி: நண்பர் படுகாயம்!
புதன் 20, மார்ச் 2024 4:18:33 PM (IST)
தூத்துக்குடியில் பைக் மீது லாரி மோதிய விபத்தில் என்டிபிஎல் அனல்மின் நிலைய ஒப்பந்த ஊழியர் இறந்தார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.
தூத்துக்குடி டி.சவேரியார் புரம் ஹவுசிங் போர்டு காலனியைச் சேர்ந்தவர்கள் பால்ராஜ் மகன் அந்தோணி பிரவீன் (25), பாக்யராஜ் மகன் சந்தோஷ் குமார் (25). இவர்கள் இருவரும் நண்பர்கள். 2பேரும், தூத்துக்குடி என்டிபிஎல் அனல் மின் நிலையத்தில் கான்ட்ராக்ட் லேபர் ஆக வேலை பார்த்து வருகிறார்கள்.
இன்று காலை 2 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று கொண்டிருந்தனர். சந்தோஷ் குமார் பைக்கை ஓட்ட, அந்தோணி பிரவீன் பின்னால் அமர்ந்திருந்தார். புதிய துறைமுகம் பீச்ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த ஒரு கண்டெய்னர் லாரி இவர்களது பைக் மீது மோதியது. இதில், 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.
அப்போது அந்தோணி பிரவீன் மீது லாரி சக்கரம் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திேயே பரிதாபமாக இறந்தார். படுகாயமடைந்த சந்தோஷ்குமார் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜாராம் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.