» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தாமிரபரணி தூய்மை திட்டம் உருவாக்க ராஜஸ்தான் நிபுணர் நியமனம்: உயர்நீதிமன்றம் உத்தரவு

ஞாயிறு 4, ஜனவரி 2026 9:02:51 AM (IST)



தாமிரபரணி ஆற்றை தூய்மையாக்கும் திட்டத்தை உருவாக்க ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த நிபுணரை மதுரை உயர்நீதிமன்றம் நியமித்தது. ‘மகசேசே விருது’ பெற்ற அவரது பரிந்துரைகள் தீவிரமாக எடுத்துக்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தது.

தாமிரபரணி ஆற்றை தூய்மைப்படுத்தக்கோரி தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரை சேர்ந்த முத்தாலங்குறிச்சி காமராஜ், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி ஆகியோர் 11.3.2024 அன்று பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தனர்.

இந்த உத்தரவுகளை நிறைவேற்றாததால் நெல்லை மாநகராட்சி கமிஷனர் ரூபேஷ்குமார், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் மதனசுதாகர், அம்பை நகராட்சி கமிஷனர் செல்வராஜ், விக்கிரமசிங்கபுரம் நகராட்சி கமிஷனர் ராமதிலகம், சேரன்மாதேவி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் முத்தையா, ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, கல்லிடைக்குறிச்சி, ஏரல் பேரூராட்சி செயல் அலுவலர்கள் மகாராஜன், முருகன், பாலசுந்தர், சுப்பிரமணியன், அறநிலையத்துறை இணை கமிஷனர் அன்புமணி உள்பட 12 பேர் மீது கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி காமராஜ் சார்பில் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்து நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமி நாதன், புகழேந்தி ஆகியோர் பிறப்பித்த உத்தரவு வருமாறு: தாமிரபரணி ஆற்றை தூய்மைப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட நிர்வாகம், நீர்வள ஆதாரத்துறை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தமிழக அரசுக்கு பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. ஓராண்டுக்கு மேலாகியும் ஆற்றை தூய்மைப்படுத்தும் பணிகள் திருப்தி அளிக்கவில்லை. நதியை தூய்மைப்படுத்துவது தொடர்பான உறுதியான திட்டம் குறித்து இந்த கோர்ட்டில் இதுவரை அறிக்கை தாக்கல் செய்யவில்லை.

இதனால் தாமிரபரணி ஆற்றின் நிலையை விரிவாக ஆய்வு செய்து பொருத்தமான சீரமைப்பு நடவடிக்கைகளை பரிந்துரை செய்வதற்காக ராஜஸ்தானை சேர்ந்த நீர் பாதுகாப்பு நிபுணர் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர் ராஜேந்திர சிங் ஆணையராக நியமிக்கப்படுகிறார்.

ராஜஸ்தானில் வறண்ட நீரோடைகளையும், ஆறுகளையும் ராஜேந்திர சிங் மீட்டெடுத்து உள்ளார். மேலும் அவர் மகசேசே விருது பெற்றவர். அவருக்கு உள்ள நேரடி அனுபவத்தின் மூலம் அவரால் தாமிரபரணியை தூய்மைப்படுத்த சாத்தியமான மற்றும் செயல்படுத்தக்கூடிய ஒரு திட்டத்தை முன்வைக்க முடியும் என்று நம்புகிறோம். அவரிடம் இருந்து வெளிவரும் பரிந்துரைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு, தாமிரபரணி ஆறு தூய்மையான நிலையை மீண்டும் பெறுவதற்காக முழுமையாகச் செயல்படுத்தப்படும்.

இப்பணிக்கு திண்டுக்கல்லில் களப்பணியாற்றிய பாலாஜி ரங்கராமானுஜத்தின் உதவியை பெற ராஜேந்திர சிங்குக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இவர்களுக்கு மாவட்ட நிர்வாகங்கள் மற்றும் அனைத்து துறை அதிகாரிகளும் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


மக்கள் கருத்து

நெல்லை ரசிகன்Jan 4, 2026 - 02:55:35 PM | Posted IP 104.2*****

திராவிட மாடல் = சாக்கடை மாடல் , சுத்தம் நா என்னன்னென்று தெரியாது, இனி திராவிடம் வந்தால் சென்னையில் கூவம் போல் சாக்கடையாக மாறி நாறிடும். சுத்தமாக வையுங்கடா

BabuJan 4, 2026 - 09:10:49 AM | Posted IP 104.2*****

COURT ORDERA MATHIKATHAVANGALA ARREST PANNI 10 NAL ULLA VACHUTA APURAM OLUNGA VELAI NADAKU ANA ATHA PANUNGA PLS

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory