» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழ்நாட்டில் ரயில்வே முனைய திறனை அதிகரிக்க பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை!

திங்கள் 5, ஜனவரி 2026 4:58:43 PM (IST)

தமிழ்நாட்டில் ரயில்வே முனைய திறனை அதிகரிக்க வேண்டும் என்று குமரி மாவட்ட பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாடு மாநிலம் கடந்த 2000 ஆண்டிலிருந்தே பொருளாதார வளர்ச்சியில் ஆண்டுதோறும் வீறுநடை போட்டு முன்னேடி வருகின்றது. இன்னும் அடுத்த பத்து ஆண்டுகளில் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு முன்னேறி செல்லும் என்பதில் ஐயமில்லை. ஆனால் கடந்த பத்து ஆண்டுகளில் தமிழ் நாட்டுக்கு இயக்கப்பட்ட புதிய ரயில்கள் என்று மிகவும் குறைவு ஆகும். 

இதில் மொத்த மக்கள் தொகையில் 90 சதமானம் மக்கள் பயணம் செய்யும் சாதாரண எக்ஸ்பிரஸ் மற்றும் சூப்பர் பாஸ்ட் தினசரி ரயில்கள் என்று பார்த்தால் வெறும் நான்கு ரயில்கள் மட்டுமே உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் புதிய வழித்தடங்களில் ரயில்கள் இயக்காத காரணத்தால் பயணிகள் தேவை பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவின் மக்கள் தொகை இரண்டாம் இடத்திலிருந்து முதல் இடத்துக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் புதிய ரயில்கள் இயக்குங்கள் என்று ரயில்வே அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்தால் ரயில் பெட்டிகள் பற்றாகுறையாக உள்ளது, ரயில் எஞ்சின் பற்றாகுறையாக உள்ளது, இருப்பு பாதை ஒருவழிப்பாதையாக உள்ளது, ரயில் முனையம் இடநெருக்கடியாக உள்ளது என்று சப்பை சாக்குபோக்கு சொல்லி காலம் கடத்துவது குறியாக உள்ளார்கள் தெற்கு ரயில்வே அதிகாரிகள். இதையும் மீறி ஒரு சில கோரிக்கைகளுக்கு நாங்கள் ரயில்வே வாரியத்துக்கு கோரிக்கையை திட்ட கருத்துரவாக சமர்ப்பித்துள்ளோம் நீங்கள் ரயில்வே வாரியத்திடம் சென்று ஆணை வாங்கி வாருங்கள் நாங்கள் இயக்குவதற்கு தயாராக உள்ளோம் என்று பதில் அளிக்கின்றனர்.

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக ஒரே ஆண்டில் 2013-ம் ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் ஒரே ஆண்டில் 

சென்னை – தஞ்சாவூர் தினசரி ரயில்

சென்னை – பழநி தினசரி ரயில்

சென்னை – வேளாங்கண்ணி தினசரி லிங்க் ரயில்

கோயம்புத்தூர் - மன்னார்குடி தினசரி ரயில்

நாகர்கோவில் - பெங்களூர் தினசரி ரயில்

பழநி – திருச்செந்தூர் தினசரி ரயில்

ஆறு தினசரி ரயில்கள் ஒரே ஆண்டில் அறிவிக்கப்பட்டு இயக்கப்பட்டது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் அது இயக்கப்படும் ரயில்களின் எண்ணிக்கை வெறும் மூன்றே ஆகும். கடந்த 10 ஆண்டுகளாக 2015-ம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் தினசரி எக்ஸ்பிரஸ் ரயில்கள் என்பது மொத்தம் நான்கு தான் உள்ளது.

1. கொல்லம் - சென்னை தினசரி இரவு நேர ரயில் (இந்த ரயில் மீட்டர் கேஜ் காலகட்டத்தில் இயக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது)

2. ராமேஸ்வரம் - தாம்பரம் தினசரி இரவு நேர ரயில்

3. கன்னியாகுமரி – திப்ருகர் வாராந்திர ரயில் வட இந்தியாவிலிருந்து வடமாநில தொழிலாளர்கள் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் வந்து வேலை செய்ய வசதியாக வேண்டி தினசரி ரயிலாக இயக்கப்பட்டது.

4. நாகர்கோவில் - தாம்பரம் அந்தியோதயா தினசரி (முழுவதும் முன்பதிவு அற்ற ரயில் மிடில் கிளாஸ் மற்றும் ஏழைகளுக்கு மிகவும் பயனுள்ளது)

மாண்புமிகு இந்திய ரயில்வே அமைச்சர் அடுத்த 5 ஆண்டுகளில் முக்கிய 48 நகரங்களில் ரயில் முனைய திறனை இரட்டிப்பாக்க திட்டம் இருப்பதாக அறிவித்துள்ளார். பயணிகளின் தேவையின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, புதிய ரயில்களை தொடங்கும் முக்கிய நகரங்களின் திறன் அடுத்த 5 ஆண்டுகளில் தற்போதைய அளவிலிருந்து இரட்டிப்பாக்கப்பட வேண்டும். இவ்வாறுதான் ரயில்வே அமைச்சர் அவர்கள் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 1000 வழித்தடங்களில் புதிய ரயில்கள் புதிதாக இயக்கப்படும் என்று வாயால் வடை சுடுவது அறிவித்துள்ளார்கள்.

புதிய ரயில்கள் அறிவிக்கப்படாத காரணத்தால் அதிகமாக பயணிகள் சொந்த கார்களில் சென்னை பெங்களூர், கோவை போன்ற அனைத்து நகரங்களுக்கும் பயணம் செய்ய தொடங்கிவிட்டனர் இதை நாம் வார விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் சாலைகளில் நிலவும் போக்குவரத்து நெரிசலை வைத்து அறிந்து கொள்ளலாம். இதைப்போல் தற்போது ரயில்களில் குளிர்சாதன பெட்டிகளில் பயணம் செய்து வந்த பயணிகள் விமான பயணத்திற்கு மாறிவிட்டனர். 

இதனால் ரயில்வேயில் பயணம் செய்யும் பயணிகள் எண்ணிக்கை ஆண்டுதோறும் குறைந்து வரும் என்பதில் ஐயமில்லை. தற்போது பிரீமியம் டைனமிக் கட்டணங்களில் இயக்கப்பட்டு வரும் ரயில்கள் கட்டணம் விமான கட்டணத்துக்கு இணையாக இருப்பதால் ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் முன்பதிவு வெகுவாக குறைந்து காலியாக இயங்கி வருகிறது. இனி இருப்பது சதாரண முன்பதிவு அற்ற பெட்டிகள் மற்றும் இரண்டாம் வகுப்பு படுக்கை பெட்டிகளில் பயணம் செய்யும் பயணிகள் மட்டுமே ஆகும். 

ஆனால் ரயில்வேதுறை கடந்த பத்து ஆண்டுகளில் வந்தே பாரத் ரயில்கள் மட்டுமே அதிக அளவில் அறிவித்து இயங்கிவருகின்றது. இது போன்ற மிடில் கிளாஸ் பயணிகள் அதிக கட்டணம் காரணமாக நடைமேடையில் நின்று வந்தே பாரத் ரயிலை பார்க்க முடியுமே தவிர பயணம் செய்ய முடியாத நிலை உள்ளது.

வரும் ஆண்டுகளில் தேவைகளை பூர்த்தி செய்ய தற்போதைய உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும். 2030 ஆம் ஆண்டுக்குள் தொடக்க திறனை இரட்டிப்பாக்கும் பணிகள் பின்வரும் நடவடிக்கைகளை உள்ளடக்கியிருக்கும். இந்த திட்டத்தில் தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், ஆகிய இரண்டு இடங்களில் கேரளாவில் உள்ள எர்ணாகுளம் ஆகிய மூன்று இடங்களிலும் தெற்கு ரயில்வேயின் கீழ் உள்ளன.

கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும் என்றால் அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்கான நமது கோரிக்கைகள்

1. திருநெல்வேலியில் 16 முதல் 20 பெட்டிகள் நீளம் கொண்ட மெமு ரயில்கள் பராமரிப்பு பணிமனை அமைக்க வேண்டும்.

2. தற்போது ரயில் பெட்டிகள் பராமரிப்பு செய்யும் மதுரை, நாகர்கோவில், திருச்சி, திருநெல்வேலி, விழுப்புரம், ராமேஸ்வரம், தாம்பரம், தூத்துக்குடி ஆகிய இடங்களில் கூடுதல் பிட்லைன்கள் நடைமேடைகள் அமைக்க வேண்டும்.

3. மும்பையை தலைமையிடமாக கொண்ட மத்திய ரயில்வே மும்பையில் அடுத்த 100 ஆண்டுகளை கணக்கில் கொண்டு மெகா முனையங்களை அமைத்து வருகிறது. இதைப்போல் தெற்கு ரயில்வேயில் மெகா ரயில்வே முனையங்களை அமைக்க வேண்டும். தற்போது ரயில் பெட்டிகள் பராமரிப்பு இனி 2000 கி.மீ லிருந்து 3000 கி.மீ ஆகவும் ரயில் பராமரிப்பு நேரத்தை 8 மற்றும் 6 மணி நேரத்திலிருந்து 5 மற்றும் 3 மணி நேரமாக குறைக்கும் திட்டம் உள்ளது. 

இவ்வாறு செய்யும் போது தற்போது உள்ள ரயில்களின் பராமரிப்பு பணிகள் வெகுவாக குறையும். இவ்வாறு குறையும் போது எளிதாக அனைத்து ரயில் பெட்டிகளையும் தெற்கு ரயில்வே மண்டலத்தில் சென்னை அருகே மற்றும் கன்னியாகுமரி அருகே என்று இரண்டு மெகா முனையம் ஏற்படுத்தி அனைத்து ரயில் பெட்டிகளையும் இந்த இரண்டு முனையங்களுக்கு கொண்டு வந்து எளிதாக பராமரிப்பு பணிகள் செய்ய முடியும். இவ்வாறு செய்யும் போது ரயில்பெட்டிகளின் எண்ணிக்கை கணிசமான அளவில் தேவை குறையும்.

4. கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும் என்றால் அதிக அளவில் ரயில் இஞ்சின் தேவைப்படும் ஆகவே நாங்குநேரியில் ரயில் இஞ்சின் தொழிற்சாலை அமைக்க வேண்டும்.

5. கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும் என்றால் அதிக அளவில் ரயில் பெட்டிகள் தேவைப்படும் ஆகவே திருச்சியில் உள்ள பொன்மலை தொழிற்சாலையை அதிக அளவில் மெமு ரயில்கள் இயக்க வேண்டும் என்ற திட்டத்தின் அடிப்படையில் மெமுரயில் பெட்டிகள் தொழிற்சாலையாக மாற்றம் செய்ய வேண்டும்.

6. சென்னை முதல் கன்னியாகுமரி மற்றும் சென்னை முதல் கோயம்பத்தூர் வரை உள்ள இருப்புபாதையை மூன்று மற்றும் நான்காவது வழிபாதையாக மாற்ற தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

7. தமிழ்நாட்டில் உள்ள ஒன்றை பாதையாக உள்ள அனைத்து இருப்புபாதைகளை உடனடியாக போர்கால நடவடிக்கையான இரட்டைபாதையாக மாற்றம் செய்ய வேண்டும்.

8. சென்னை முதல் கன்னியாகுமரி மற்றும் சென்னை முதல் கோயம்பத்தூர் வரை உள்ள இருப்புபாதையை தானியங்கி சிக்னல் ஆக மாற்றம் செய்ய வேண்டும்.

9. சென்னை முதல் கன்னியாகுமரி மற்றும் சென்னை முதல் கோயம்பத்தூர் வரை உள்ள இருப்புபாதையின் வேகத்தை மணிக்கு 180 கி.மீ வேகத்தில் ரயில்களை இயக்குவதற்கு ஏற்றவாறு மாற்றம் செய்ய வேண்டும்.

10. அதிக மக்கள் தொகை அடர்த்தி நிறைந்த பகுதிகளான திருநெல்வேலி – திருவனந்தபுரம் பாதையில் பகல்நேரத்தில் ஒரு மணி நேரத்துக்கு ஒரு மெமு ரயில் வீதம் இயக்குவதற்கு வசதியாக அடிப்படை கட்டமைப்பு வசதிகளை எற்படுத்த வேண்டும்.

புதிய ரயில் பெட்டி தொழிற்சாலைகள் அமைத்தல்:

இந்தியாவில் நாளுக்கு நாள் ரயில் போக்குவரத்தில் பயணிகள் பயணம் செய்வது அதிகரித்து அதிக ரயில்கள் தேவை அதிகரித்து கொண்டே வருகிறது. அதற்கு ஏற்ப புதிய ரயில் பெட்டிகளின் தயாரிப்பை அதிகரிக்க வேண்டும். இதற்கு புதிய தொழிற்சாலைகளை அமைக்க வேண்டும். இவ்வாறு புதிய ரயில் பெட்டி தொழிற்சாலைகளை நிறுவினால் மட்டுமே புதிய ரயில்களை நாம் அதிக அளவில் இயக்க முடியும். 

கடந்த 11 ஆண்டுகளில் மத்திய அரசு நீண்டகால தொலைநோக்குப் பார்வையோடு புதிதாக எந்த ஒரு ரயில் பெட்டி தொழிற்சாலையில் அமைக்க முன்வரவில்லை. கடந்த ஆண்டுகளில் இரண்டு முதல் மூன்று இடங்களில் புதிய ரயில் பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கும் பணிகள் தொடங்கி இருந்தால் தற்போது அதன் உற்பத்தியை தொடங்கியிருக்கும். நமது தேவையை இது பூர்த்தி செய்ய பயனுள்ளதாக இருந்திருக்கும். ஆனால் தற்போதைய அரசு தனியாரிடமிருந்து ரயில் பெட்டிகள் விலைக்கு வாங்கும் திட்டத்தை ஊக்குவிக்கும் திட்டத்தை வைத்துள்ளார்கள்.

இரண்டாம் கட்ட மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களில் உள்ள ரயில் நிலையங்களை பல கோடிகள் செலவில் அமித் பாரத் என்ற பெயரில் தங்க முலாம் பூசும் வேலைகள் நன்றாக நடைபெறுகிறது. இந்த நிதியை கொண்டு கூடுதல் ரயில்கள் இயக்க தேவையான கட்டமைப்பு வசதிகளை பெருக்கி அதிக அளவில் எக்ஸ்பிரஸ் சூப்பர் பாஸ்ட் ரயில்களை இயக்க வேண்டும். அனைத்து மக்களையும் சுற்றுசூழல் மாசு இல்லாத ரயில் போக்குவரத்து கொண்டு வர வேண்டும் என்பது தான் ஒரு அரசின் தலையாய கடமையாக இருக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory