» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குழந்தைகளை அரசியலுக்குப் பயன்படுத்துவதா? த.வெ.க தலைவர் விஜய் மீது விசிக புகார்!

சனி 25, ஏப்ரல் 2026 4:26:08 PM (IST)

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், குழந்தைகளை ஓட்டு வங்கியாகப் பயன்படுத்தி தேர்தல் விதிமுறைகளை மீறியதாகக் கூறி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகி கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.

கோவை கணபதி பகுதியைச் சேர்ந்த வி.சி.க. தொண்டரணி மாவட்ட அமைப்பாளர் பாலகிருஷ்ணன் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த 21-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற இறுதிக்கட்டப் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய த.வெ.க. தலைவர் விஜய், "குழந்தைகள் சாக்லேட் அல்லது கிண்டர் ஜாய்க்கு அடம்பிடிப்பது போல, பெற்றோரிடம் அடம்பிடித்து தனக்கு வாக்களிக்கச் சொல்ல வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்தார். 

இது அரசியல் முதிர்ச்சியற்ற செயல் மட்டுமல்லாது, பிஞ்சு குழந்தைகளின் மனநிலையைத் தேர்தல் ஆதாயத்திற்காகத் தூண்டிவிடும் செயலாகும். "எனது 5 வயது மகன் உணவு உண்ண மறுக்கிறான் விஜய்யின் இந்தப் பேச்சால் தனது குடும்பத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து பாலகிருஷ்ணன் மனுவில் உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்:

"விஜய்யின் பேச்சைக் கேட்ட எனது 5 வயது மகன், அவருகே வாக்களிக்குமாறு என்னிடம் அடம் பிடிக்கிறான். நான் மறுத்தபோது, மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி அழுததுடன், உணவையும் தவிர்க்கிறான். 'விஜய் மாமா ஜெயிக்கவில்லை என்றால் நான் சாப்பிட மாட்டேன்' என அவன் பிடிவாதம் பிடிப்பதால், அவனிடம் பொய் சொல்ல வேண்டிய நிர்பந்தம் எனக்கு ஏற்பட்டுள்ளது. இது எனக்கு மிகுந்த மன வேதனையை அளிக்கிறது."

தேர்தல் விதிமுறைகளை மீறி குழந்தைகளின் மனதில் நஞ்சை விதைத்த விஜய்யின் செயல், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா சட்டங்களின்படி தண்டனைக்குரிய குற்றமாகும் எனப் புகாரில் கூறப்பட்டுள்ளது.

குழந்தைகள் குறித்த சர்ச்சைக்குரிய வீடியோ காட்சிகளைச் சமூக வலைதளங்களில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும். தேர்தல் விதிகளை மீறிய த.வெ.க. தலைவர் விஜய் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாகத் தேர்தல் ஆணையத்திற்கும் புகார் அனுப்பியுள்ளதாகவும், காவல்துறை நடவடிக்கை எடுக்கத் தவறினால் நீதிமன்றத்தை நாடப்போவதாகவும் வி.சி.க. நிர்வாகி பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory