» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

புதுச்சேரி சிறுமி கொலை வழக்கில் கருணாஸ் குற்றவாளி: மே 5-இல் தண்டனை அறிவிப்பு!

வியாழன் 30, ஏப்ரல் 2026 5:29:47 PM (IST)

புதுச்சேரியில் ஒன்பது வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில், கைதான கருணாஸ் என்பவரைக் குற்றவாளி என அறிவித்து புதுச்சேரி நீதிமன்றம் இன்று அதிரடித் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2024-ஆம் ஆண்டு மார்ச் மாதம், புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகர் பகுதியைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுமி மாயமானார். தேடுதல் வேட்டைக்குப் பிறகு, வீட்டின் அருகிலிருந்த கால்வாயில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இச்சம்பவம் புதுச்சேரி மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், போராட்டங்களையும் ஏற்படுத்தியது.

இது தொடர்பாகத் தீவிர விசாரணை நடத்திய காவல்துறையினர், அதே பகுதியைச் சேர்ந்த கருணாஸ் (19) மற்றும் விவேகானந்தன் (57) ஆகிய இருவரைக் கைது செய்தனர். இவர்கள் இருவரும் சேர்ந்து சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். கைது செய்யப்பட்ட இருவரும் காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 

வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இரண்டாம் குற்றவாளியான விவேகானந்தன் சிறை கழிப்பறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதனால், முதல் குற்றவாளியான கருணாஸ் மீது மட்டும் வழக்குத் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் அனைத்துக் கட்ட விசாரணைகளும் முடிவடைந்த நிலையில், இன்று நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கியது. 

கருணாஸ் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டதையடுத்து, அவரைச் சிறுமி வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குற்றவாளி என நீதிபதி அறிவித்தார். குற்றவாளி கருணாஸிற்கான தண்டனை விவரங்கள் வரும் மே மாதம் 5-ஆம் தேதி அறிவிக்கப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.

அரசுத் தரப்பு வாதம்: "இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்ட குற்றவாளிக்குச் சட்டப்படி வழங்கப்பட வேண்டிய அதிகபட்ச தண்டனையான மரண தண்டனையை வழங்க வேண்டும்" என அரசுத் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வலியுறுத்தினார்.

இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பு மற்றும் தண்டனை விவரம் மே 5-ஆம் தேதி வெளியாக உள்ளதால், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory