» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

எம்எல்ஏக்களை விலைபேசும் தவெக: குதிரை பேரத்தை தடுக்க ஆளுநரிடம் அதிமுக அவசர மனு!

சனி 30, மே 2026 3:46:21 PM (IST)



அதிமுக எம்எல்ஏக்களை விலைபேசும் தவெகவின் நடவடிக்கையை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும்" என்று வலியுறுத்தி அதிமுக சார்பில் தமிழக ஆளுநரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. 

அதிமுகவைச் சேர்ந்த முக்கிய சட்டமன்ற உறுப்பினர்களான மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா மற்றும் இசக்கி சுப்பையா ஆகியோர் தங்களது பதவிகளை அதிரடியாக ராஜினாமா செய்துவிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளனர். இந்த அடுத்தடுத்த அரசியல் மாற்றங்கள் அதிமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும் புகைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது. 

தவெக கட்சி நிர்வாகத்தினர் குதிரை பேரத்தில் ஈடுபட்டு எம்எல்ஏக்களை இழுப்பதாக எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். இச்சூழ்நிலையில், குதிரை பேரத்தைத் தடுத்து நிறுத்த ஆளுநர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி அனுப்பிய புகார் மனுவை ஆளுநரிடம் அதிமுகவினர் நேரில் வழங்கினர்.

அதிமுக விவசாயப் பிரிவுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் ம. தனபால் ஆகியோர் இன்று தமிழக ஆளுநரை நேரில் சந்தித்து இந்த மனுவினை ஒப்படைத்தனர். ஆளுநரைச் சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அக்ரி கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது: "குதிரை பேரத்தின் மூலமாக அதிமுக எம்எல்ஏக்களை விலைபேசும் தவெகவின் ஜனநாயக விரோத நடவடிக்கையைத் தடுத்து நிறுத்த வேண்டும் என எங்களது பொதுச்செயலாளர் இபிஎஸ் கொடுத்த புகார் மனுவை ஆளுநரிடம் வழங்கியுள்ளோம். 

இது குறித்து ஆளுநர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம். தற்போதுள்ள சூழலில் தலைமைச் செயலகத்தையே தவெகவின் கட்சி அலுவலகமாக மாற்றிவிட்டனர்" என்று தெரிவித்தார். எம்எல்ஏக்களின் தொடர் ராஜினாமாவைத் தொடர்ந்து, அதிமுக ஆளுநரிடம் முறையிட்டுள்ள இந்தச் சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory