» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருச்செந்தூர் கோயில் கட்டண உயர்வு அறிவிப்பு : ஜூலை 7-க்குள் ஆட்சேபனைகளைத் தெரிவிக்கலாம்!

செவ்வாய் 23, ஜூன் 2026 10:50:50 AM (IST)

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் மூலவர் அபிஷேகக் கட்டணம் 1,500 ரூபாயில் இருந்து 10,000 ரூபாயாக உயர்கிறது. இதுபோல் பல்வேறு கட்டண உயர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

தற்போதைய விலைவாசிக்கு ஏற்பக் கட்டணங்களை மாற்றியமைக்கத் தக்கார் தீர்மானத்தின் அடிப்படையில் புதிய கட்டண உயர்வு உத்தேசிக்கப்பட்டுள்ளது. 

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நிலவி வரும் விலைவாசி உயர்வு மற்றும் பணவீக்கத்தைக் கருத்தில் கொண்டும், நிர்வாக நலன் மற்றும் வருவாய்க் குறைவை ஈடுசெய்யும் வகையிலும், தற்போதுள்ள கட்டணச் சேவைகள் மற்றும் அபிஷேக சிறப்பு தரிசனக் கட்டணங்களை உயர்த்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த விரிவான விபரங்கள் அடங்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தங்கரத உலா மற்றும் சண்முகார்ச்சனை: 

தங்கரத உலா திட்டத்திற்கான ஒருநாள் கட்டணம் 2,500 ரூபாயில் இருந்து 5,000 ரூபாயாகவும், அதன் நிரந்தர வைப்பு நிதி 50,000 ரூபாயில் இருந்து 1 லட்ச ரூபாயாகவும் உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதேபோல் சண்முகார்ச்சனைக்கான ஒருநாள் கட்டணம் 5,000 ரூபாயில் இருந்து 30,000 ரூபாயாகவும், நிரந்தர வைப்பு நிதி 72,000 ரூபாயில் இருந்து 4,32,000 ரூபாயாகவும் உயர்த்தப்படுகிறது.

மூலவர் அபிஷேகம் மற்றும் பூஜைகள்: 

மூலவர் அபிஷேகத்திற்கான ஒருநாள் கட்டணம் 1,500 ரூபாயில் இருந்து 10,000 ரூபாயாக உயர்த்தப்படுகிறது (இதில் இரண்டு நபர்களுக்கான அபிஷேக தரிசனமும் அடங்கும்). மேலும், ஒன்பது கால பூஜைக்கான ஒருநாள் கட்டணம் 1,500 ரூபாயில் இருந்து 8,500 ரூபாயாகவும், அதன் நிரந்தர வைப்பு நிதி 20,000 ரூபாயில் இருந்து 90,000 ரூபாயாகவும் அதிகரிக்கப்படுகிறது.

சந்தனக்காப்பு அனுமதி: 

சந்தனக்காப்பு செய்வதற்கான ஒருநாள் அனுமதி கட்டணம் தற்போதுள்ள 100 ரூபாயில் இருந்து 1,000 ரூபாயாக உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதற்கான 1.5 கிலோ சந்தனக் கட்டை வழங்கும் நடைமுறையில் மாற்றமில்லை.

அபிஷேக சிறப்பு தரிசனக் கட்டண மாற்றம்: 

தற்போது சாதாரண நாட்களில் 500 ரூபாயாகவும், திருவிழா மற்றும் விசேட தினங்களில் 2,000 ரூபாயாகவும் வசூலிக்கப்பட்டு வரும் அபிஷேக தரிசனக் கட்டணம், இனி அனைத்து தினங்களுக்கும் பொதுவான முறையில் 2,500 ரூபாயாக உயர்த்தப்பட உள்ளது.

ஆட்சேபனைகள் தெரிவிக்க வாய்ப்பு: 

இந்த கட்டண உயர்வுகள் குறித்து பக்தர்கள் அல்லது பொதுமக்களுக்கு ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தால், அவற்றை எழுத்துப்பூர்வமாக வரும் 07.07.2026 மாலை 05.45 மணிக்குள் திருச்செந்தூர் கோயில் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

தொடர்பு முகவரி:

இணை ஆணையர் / செயல் அலுவலர்,

அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்,

திருச்செந்தூர் - 628215.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory