» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் தனியாரிடம் ஒப்படைப்பா?: இஸ்ரோ விஞ்ஞானிகள் விளக்கம்!

திங்கள் 10, ஆகஸ்ட் 2026 8:38:45 AM (IST)

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் கட்டப்பட்டு வரும் நாட்டின் 2-வது ராக்கெட் ஏவுதளத்தின் நிர்வாகப் பணிகளைத் தனியாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வெளியான தகவல் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இஸ்ரோவின் முதல் ராக்கெட் ஏவுதளம் அமைந்துள்ள நிலையில், 2-வது ஏவுதளம் தமிழகத்தில் குலசேகரன்பட்டினத்தில் அமைக்கப்பட்டு வருகிறது. பூமத்திய ரேகைக்கு அருகில் அமைந்துள்ளதால், குறைந்த எரிபொருளில் சிறிய ரகச் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த இது மிகவும் ஏற்ற இடமாகும்.

இதற்காக 2,233 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு, ரூ. 986 கோடி மதிப்பில் கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இஸ்ரோ அலுவலகம், ராக்கெட் ஏவுதளக் கட்டிடம், பராமரிப்புப் பணிமனை மற்றும் ஒரே நேரத்தில் 3 ஹெலிகாப்டர்கள் தரையிறங்கும் வசதி கொண்ட ஹெலிபேட் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன. வரும் 2027 மார்ச் மாதத்திற்குள் பணிகள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏவுதளக் கட்டுமானப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இதன் செயல்பாடு மற்றும் மேலாண்மைப் பணிகளை மேற்கொள்ள இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட தகுதியான தனியார் நிறுவனங்களிடம் இருந்து விருப்பம் கோருவதற்கான நடவடிக்கையை 'இந்திய தேசிய விண்வெளி அங்கீகார மற்றும் மேம்பாட்டு மையம்' (IN-SPACe) மேற்கொண்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் நிறுவனம் அன்றாட நிர்வாகப் பணிகளை மேற்கொள்ளும் என்றும், இதன் மூலம் தனியார் விண்வெளி நிறுவனங்கள் தங்களது ராக்கெட்டுகளை ஏவுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.

இதுகுறித்து நிலவி வரும் குழப்பங்களுக்கு விளக்கம் அளித்த இஸ்ரோ விஞ்ஞானிகள்: "குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் தனியாருக்கு விற்பனை செய்யப்படவில்லை. ஏவுதளத்தின் உரிமையைத் தனியாருக்கு மாற்றும் அறிவிப்பு எதுவும் இல்லை. ஏவுதளத்தின் செயல்பாடு மற்றும் நிர்வாகப் பராமரிப்பை மட்டுமே தனியார் நிறுவனத்திடம் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இது மத்திய அரசின் விண்வெளித்துறை சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாகும்."  எனத் தெரிவித்தனர்.

இருப்பினும், நிர்வாகம் தனியார்மயமாவதற்குப் உள்ளூர் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பொதுத்துறை நிதியிலும் இஸ்ரோவின் தொழில்நுட்பத் திறனிலும் உருவாக்கப்படும் இந்த ஏவுதளத்திற்காகப் பல்வேறு கிராம மக்கள் வீடுகளைக் காலி செய்து இடம் பெயர்ந்துள்ளதால், நிலம் வழங்கிய குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory