» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமை பதியில் ஆவணி திருவிழா தொடங்கியது: ஆக.31ல் தேரோட்டம்!
வெள்ளி 21, ஆகஸ்ட் 2026 4:27:31 PM (IST)

குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப்பதியில், ஆவணித் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் வெகுவிமர்சையாகத் தொடங்கியது.
கன்னியாகுமரி மாவட்டம் சுவாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமை பதியில் ஆண்டுதோறும் வைகாசி, ஆவணி, தை மாதங்களில் 11 நாட்கள் திருவிழா நடப்பது வழக்கம். அவ்வகையில் இந்த ஆண்டின் ஆவணித் திருவிழா இன்று வெள்ளிக்கிழமை (21-ம் தேதி) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி இன்று அதிகாலை 4 மணிக்கு முத்திரி பதமிட்டு பள்ளியறை திறத்தல், 5 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடையும், காலை 6.30 மணிக்கு கொடியேற்றம் நிகழ்ச்சியும் நடந்தது. தலைமைபதி தலைமை குரு பால.பிரஜாபதி அடிகளார் கொடியேற்றி திருவிழாவை தொடங்கி வைத்தார்.
குரு பால. லோகாதிபதி, குரு.பையன் கிருஷ்ணராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் பணிவிடையும், தர்மங்களும், வாகன பவனியும் நடைபெற்றது.
நண்பகல் 12 மணிக்கு வடக்கு வாசலில் அன்னதர்மம் நடைபெற்றது. மாலையில் பணிவிடையும், இரவு 7 மணிக்கு அய்யா தொட்டில் வாகனத்தில் எழுந்தருளி வீதி வலம் வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது. வருகிற 31-ம் தேதி வரை 11 நாட்கள் விழா நடக்கிறது
நாளை சனிக்கிழமை 22-ம் தேதி மாலையில் அய்யா மயில் வாகனத்தில் பவனி வருதல், மூன்றாம் நாளான நாளை ஞாயிற்றுக்கிழமை 23-ம் தேதி இரவு அய்யா அன்ன வாகனத்தில் வெள்ளை சாத்தி வீதி வலம் வருதல், 24-ம் தேதி அய்யா பூஞ்சப்பர வாகனத்தில் வலம் வருதல், 25-ம் தேதி அய்யா பச்சைசாற்றி சப்பர வாகனத்தில் பவனி வருதல், 26-ம் தேதி அய்யா சர்ப்ப வாகனத்தில் பவனி வருதல், 27-ம் தேதி அய்யா கருட வாகனத்தில் பவனி வருதல் நிகழ்ச்சி நடக்கிறது.
8-ம் திருநாளான 28-ம்தேதி அய்யா வெள்ளை குதிரை வாகனத்தில் எழுந்தருளி முத்திரி கிணற்றின் கரையில் கலி வேட்டையாடுதல் நிகழ்வு நடக்கிறது, தொடர்ந்து பல கிராமங்களுக்கு அய்யா குதிரை வாகனத்தில் சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சியும், இரவு 11 மணிக்கு வடக்கு வாசலில் அய்யா தவக்கோலத்தில் காட்சி தரும் நிகழ்வும், தொடர்ந்து அன்னதர்மமும் நடக்கிறது.
29-ம் தேதி அய்யா அனுமன் வாகனத்தில் எழுந்தருளி பவனி வருதலும், 30-ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு அய்யா இந்திர விமான வாகனத்தில் எழுந்தருளி பவனிவரும் நிகழ்சியும் நடக்கிறது.
ஆகஸ்ட் 31ல் தேரோட்டம்:
11-ஆம் திருநாளான ஆகஸ்ட் 31 (திங்கட்கிழமை) நண்பகல் 12 மணிக்கு அய்யா பல்லக்கில் புறப்பட்டு பஞ்சவர்ண தேருக்கு எழுந்தருள, தேரோட்டம் வெகுவிமர்சையாக நடைபெறவுள்ளது. அன்று இரவு 12 மணிக்குக் காளை வாகனத்தில் அய்யா பவனி வந்த பிறகு கொடியிறக்கப்பட்டு, பக்தர்களுக்கு இனிமம் வழங்கித் திருவிழா நிறைவடையும். திருவிழாவிற்கான ஏற்பாடுகளைத் தலைமைப்பதி நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தினால் கடைகளுக்கு சீல்: மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை!
வெள்ளி 21, ஆகஸ்ட் 2026 5:39:23 PM (IST)

தேங்காய்பட்டணத்தில் ரூ. 5 கோடியில் புதிய சுற்றுலாத்தளம்: ஆட்சியர் மு.பிரதாப் ஆய்வு!
வெள்ளி 21, ஆகஸ்ட் 2026 5:09:06 PM (IST)

தூத்துக்குடி கப்பல் கட்டும் தளம் விவகாரம்: அமைச்சரிடம் உப்பு உற்பத்தியாளர்கள் கோரிக்கை!
வெள்ளி 21, ஆகஸ்ட் 2026 3:36:28 PM (IST)

திமுக எம்எல்ஏக்களுக்கு அரசு வழங்கும் கார் வேண்டாம் - சட்டப்பேரவையில் உதயநிதி அறிவிப்பு
வெள்ளி 21, ஆகஸ்ட் 2026 12:23:23 PM (IST)

தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்கோத்ரா சந்திப்பு
வெள்ளி 21, ஆகஸ்ட் 2026 11:12:07 AM (IST)

சட்டசபையா? சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியா? என்று சந்தேகம் வருகிறது - உதயநிதி குற்றச்சாட்டு!
வெள்ளி 21, ஆகஸ்ட் 2026 11:02:20 AM (IST)


