» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

லெவிஞ்சிபுரம் டாஸ்மாக் கடையை அகற்றாத மர்மம் என்ன?மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேள்வி!

வியாழன் 27, ஆகஸ்ட் 2026 3:38:42 PM (IST)

தூத்துக்குடி லெவிஞ்சிபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை இதுவரை அகற்றாதது ஏன் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. 

பொதுமக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் டாஸ்மாக் கடைகளை அகற்றத் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், தூத்துக்குடி லெவிஞ்சிபுரம் பகுதியில் பாதிப்பை ஏற்படுத்தி வரும் டாஸ்மாக் கடையை இதுவரை அகற்றாதது ஏன் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேள்வி எழுப்பியுள்ளதுடன், இதன் பின்னணி குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது.

தூத்துக்குடி லெவிஞ்சிபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபானக் கடையால் அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றனர். மதுபானம் அருந்திவிட்டுச் சிலர் வீடுகளின் வாசல்கள் மற்றும் சாலையோரங்களில் படுத்து உறங்குவதால் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பொதுமக்கள் அச்சத்துடனும் மன உளைச்சலுடனும் வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால், லெவிஞ்சிபுரம் டாஸ்மாக் கடையை உடனடியாக வேறு இடத்திற்கு மாற்றக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

கடையை அகற்றக் கோரி டாஸ்மாக் கடை முற்றுகைப் போராட்டத்தை ஜூலை 23 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்ததைத் தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில், சம்பந்தப்பட்ட தாசில்தார் 20 நாட்களுக்குள் டாஸ்மாக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என எழுத்துப்பூர்வமாக உறுதியளித்தார்.

ஆனால், அந்த காலக்கெடு முடிந்த பின்னரும் இதுவரை கடையை அகற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பொதுமக்களின் தொடர் கோரிக்கையும் அதிகாரிகள் அளித்த எழுத்துப்பூர்வமான உறுதியும் ஏன் செயல்படுத்தப்படவில்லை? லெவிஞ்சிபுரம் டாஸ்மாக் கடையை அகற்றுவதில் மட்டும் ஏன் இந்தத் தாமதம்? என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

மேலும், டாஸ்மாக் நிர்வாகத்தில் உள்ள சில அதிகாரிகள் பணம் பெற்றுக்கொண்டதாகப் பொதுமக்கள் தெரிவிக்கும் குற்றச்சாட்டுகள் குறித்தும் உரிய விசாரணை நடத்த வேண்டும். இந்தக் குற்றச்சாட்டில் உண்மை உள்ளதா என்பதைச் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் விசாரித்து, தவறு நடைபெற்றிருப்பது உறுதி செய்யப்பட்டால் உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கட்சி வலியுறுத்தியுள்ளது.

பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் அமைதியான வாழ்க்கையைக் கருத்தில் கொண்டு, லெவிஞ்சிபுரம் டாஸ்மாக் கடையை உடனடியாக அகற்றி வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். கடையை அகற்றுவதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து டாஸ்மாக் உயர் அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை நடத்தி உண்மை நிலையை வெளிப்படுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தூத்துக்குடி மாநகரச் செயலாளர் எம்.எஸ்.முத்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பொதுமக்களின் நியாயமான கோரிக்கை நிறைவேறும் வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்டம் தொடரும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory