» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

அறுவை சிகிச்சை பின் கேப்டனாக களமிறங்கிய பும்ரா! வெற்றியுடன் துவங்கியது இந்தியா!!

சனி 19, ஆகஸ்ட் 2023 12:53:04 PM (IST)



முதுகில் அறுவை சிகிச்சை செய்து கொண்டு 11 மாதங்களுக்குப் பிறகு பந்து வீசிய ஜஸ்பிரித் பும்ரா நேற்று அயர்லாந்துக்கு எதிராக பந்து வீசி நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளார். அதே போல் இன்னொரு வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணாவும் உடல் நிலை நன்றாகத் தேறியிருப்பது அவரது பந்து வீச்சு வேகத்தில் தெரிந்தது.

பும்ரா அதிகபட்சம் 141 கிமீ வேகம் வீசினால் பிரசித் கிருஷ்ணா மணிக்கு 145 கிமீ வேகம் தொட்டார். இருவருமே பவுன்சர்கள், யார்க்கர்கள், ஸ்லோயர் பந்துகள் என்று அனைத்து ஆயுதங்களையும் திறம்பட பயன்படுத்தினர். பும்ரா 127 கிமீ வேகத்திலிருந்து மெல்ல 135 கிமீ, 141 கிமீ வேகம் வரை தொட்டார். இருவரது பவுலிங் ஆக்‌ஷனிலும் எந்த வித அசவுகரியமும் அவர்களுக்கு இருந்ததாகத் தெரியவில்லை. ஆனாலும் எச்சரிக்கை தேவை. உடனடியாக மணிக்கு 145 கிமீ-க்கும் மேல் வீசும் முயற்சிகளில் ஈடுபடக்கூடாது. காயத்துக்குக் காரணமாகும் பந்து வீச்சு முயற்சிகளைக் கைவிட வேண்டும்.

கிளென் மெக்ரா இதற்கு சிறந்த உதாரணம். முன் காலை அதிகம் தூக்கி தரையில் அடிக்க மாட்டார், அதே போல் பின் காலின் பாதம் வீசும் போது பக்கவாட்டாக இல்லாமல் நேராக இருக்குமாறு பார்த்துக் கொள்வார், தன்னுடைய உயரத்தையும் ரிஸ்ட்டையும் அதிகம் பயன்படுத்தி பந்தை வெளியே எடுப்பதும் உள்ளே கொண்டு வருவதையும் திறம்படச் செய்தார் கிளென் மெக்ரா. அதே போல் நல்ல உயரம் இருக்கும் பும்ராவும், பிரசித் கிருஷ்ணாவும் காயத்திற்குக் காரணமாகும் பந்து வீச்சு முறையை கைவிட்டு, உயரத்திலிருந்து பந்தை டெலிவரி செய்வது கை மணிக்கட்டை திறம்பட பயன்படுத்தி தொடை, கணுக்கால் தசைகளுக்கும், முதுகுத் தசைக்கும் அதிக அழுத்தம், பாரம் கொடுக்காமல் இருப்பது நல்லது.

பும்ராவிடம் அதே இன்ஸ்விங்கர் குலையாமல் அப்படியே உள்ளது. 4-வது 5வது ஸ்டம்பிலிருந்து ஆஃப் திசையில் பிட்ச் செய்து விக்கெட் கீப்பரின் இடது கைக்குச் செல்லும் இன்ஸ்விங்கர் மாறாமல் அப்படியே இருப்பதை நேற்று காண முடிந்தது. ஆனாலும் அயர்லாந்து ஆல்ரவுண்டர் மெக்கார்த்தி பும்ராவை பிக் செய்து அடித்த மிகப்பெரிய சிக்ஸ் மைதானத்திற்கு வெளியே இருக்கும் கழிப்பறைக்கு அருகே போய் விழுந்தது என்னவோ உண்மைதான். ஆகவே அடிக்க முடியாத பவுலர் பும்ரா என்ற அந்தப் பழைய தன்மை, அல்லது அடிப்பதற்குக் கடினமான பவுலர் பும்ரா என்ற தன்மை கொஞ்சம் போயிருக்கலாம் என்று தெரிகிறது.

எப்படியும் காயத்திலிருந்து மீண்டுவரும் பவுலர்களுக்கு கிரீசுக்கு அருகே வந்து வேகம் கூட்டி வீசும்போது மீண்டும் காயமடைந்து விடுவோம் என்ற பயம் இருக்கவே செய்யும். முதலில் பயத்தை கைவிட வேண்டும், பிறகு வேகத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக கூட்ட வேண்டும். உடல் ஸ்ட்ரெஸ் ஆகாமல் சரியான லெந்த்தில் ஸ்விங் பவுலிங், யார்க்கர்களை வீசினாலே போதுமானது. பும்ராவின் முதல் பந்து பவுண்டரிக்குப்பறந்தாலும் முதல் ஓவரை 5 டாட் பால்கள், 2 விக்கெட்டுகளுடன் முடித்து தன் வரவை அறிவித்தார் பும்ரா.

பிரசித் கிருஷ்ணாவும் அற்புதமாக வீசினார். ஆனால் 4 பவுண்டரிகள் ஒரு சிக்சரை கொடுத்தார் பிரசித் கிருஷ்ணா. பும்ரா போலவே 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். பிரசித் கிருஷ்ணா ஏற்கனவே 14 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் ஆடியிருக்கிறார். ஆகவே அவர் உலகக்கோப்பையில் மிடில் ஓவர்களை சிக்கனமாக வீச பயிற்சி மேற்கொண்டு அணிக்குத் திரும்புவார் என்று எதிர்பார்க்கலாம்.

தான் இன்னும் கொஞ்சம் நன்றாக வீசியிருக்கலாம் என்றார் பிரசித் கிருஷ்ணா. ஏனெனில் பின் ஓவர்களில் பும்ராவும் இவருமே மெக்கார்த்தியின் காட்டடிக்குச் சிக்கினர். உலகக்கோப்பையை பற்றி இப்போதே கூற முடியாது, ஆனால் ஆசியக் கோப்பை தொடருக்கு பிரசித் கிருஷ்ணா, பும்ரா இருவரும் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிகிறது. இடையில் காயமடையாமல் இருக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் பிரார்த்தனையாக இருக்கும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory