» சினிமா » செய்திகள்

கேரவனில் அத்துமீறியதாக நடிகை புகார்: மலையாள இயக்குநர் ரஞ்சித் கைது!

வியாழன் 2, ஏப்ரல் 2026 5:56:42 PM (IST)

கேரவனில் நடிகையிடம் தவறாக நடந்துகொண்ட புகாரின் அடிப்படையில் பிரபல இயக்குநர் ரஞ்சித் கைது செய்யப்பட்டுள்ளார். 

மலையாளத் திரையுலகின் முன்னணி இயக்குநரும், மூன்று முறை தேசிய விருது வென்றவருமான ரஞ்சித் பாலகிருஷ்ணன், படப்பிடிப்பு தளத்தில் நடிகையிடம் தவறாக நடந்துகொண்ட புகாரின் அடிப்படையில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் கேரளா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் ரஞ்சித் இயக்கி வந்த ஒரு புதிய படத்தில் நடித்த இளம் நடிகை ஒருவர், போலீசில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அதில்: படப்பிடிப்பின் போது தன்னைத் தனியாகக் கேரவனுக்குள் அழைத்து, ரஞ்சித் தவறான முறையில் அத்துமீற முயன்றதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் புகாரின் அடிப்படையில், பாலியல் தொந்தரவு, சட்டவிரோதமாக அடைத்து வைத்தல், ஆபாசச் சைகைகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து, தொடுபுழா பகுதியில் இருந்த ரஞ்சித்தை போலீசார் கைது செய்து, விசாரணைக்காகக் கொச்சிக்கு அழைத்துச் சென்றனர்.

மலையாள சினிமாவில் கதைக்கதாசிரியர், தயாரிப்பாளர், நடிகர் எனப் பன்முகத் திறமை கொண்டவர் ரஞ்சித்.  மோகன்லால் நடித்த 'ராவணபிரபு' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இவர் இயக்கிய "திரைக்கதா", "இந்தியன் ரூபீ" மற்றும் "ஸ்பிரிட்" ஆகிய திரைப்படங்களுக்காக மூன்று முறை தேசிய விருதுகளை வென்றுள்ளார்.

ரஞ்சித் மீது இத்தகைய புகார்கள் எழுவது இது முதல்முறை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது: 2009-ல் 'பாலேரி மாணிக்கம்' படப்பிடிப்பின் போது, ஒரு பெங்காலி நடிகை இவர் மீது புகார் அளித்திருந்தார். கேரளாவில் பெரும் விவாதத்தைக் கிளப்பிய ஹேமா கமிட்டி அறிக்கையிலும் இவரது பெயர் இடம்பெற்றதாகத் தகவல்கள் வெளியாகின.

முன்னதாக ஒரு இளைஞரும் இவர் மீது புகார் அளித்திருந்த நிலையில், தற்போது மீண்டும் ஒரு நடிகை புகார் அளித்துள்ளது இந்த விவகாரத்தை விஸ்வரூபம் எடுக்க வைத்துள்ளது.

இந்தக் கைது சம்பவம் மலையாளத் திரையுலகில் பெண்களின் பாதுகாப்பு குறித்த அச்சத்தை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. முன்னணிப் பொறுப்பில் இருப்பவர்கள் மீதே தொடர் புகார்கள் எழும் நிலையில், படப்பிடிப்புத் தளங்களில் பெண்களுக்குப் பாதுகாப்பு இருக்கிறதா?" என்ற கேள்வியை சமூக ஆர்வலர்களும் நடிகைகளும் எழுப்பி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory