» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

விரைவில் அறிமுகமாகிறது பிளாஸ்டிக் ரூபாய் நோட்டு: ஆர்பிஐ முதல்கட்டச் சோதனை முயற்சி!

செவ்வாய் 21, ஜூலை 2026 11:36:15 AM (IST)

Plasticurrency.jpg

இந்தியாவில் தற்போது புழக்கத்திலுள்ள காகித நோட்டுகளுக்குப் பதிலாக, நீண்ட காலம் உழைக்கக்கூடிய பிளாஸ்டிக் (பாலிமர்) ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்ய இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) திட்டமிட்டுள்ளது. இதற்கான முதல்கட்டச் சோதனை முயற்சியை ரிசர்வ் வங்கி விரைவில் தொடங்கவுள்ளது.

இச் சோதனை முயற்சி வெற்றிபெறும் பட்சத்தில், 2027-ஆம் ஆண்டில் முழுவீச்சில் பிளாஸ்டிக் நோட்டுகள் புழக்கத்திற்கு வரும் எனத் தெரிகிறது. மக்களிடையே அதிக அளவில் கைமாறி எளிதில் அழுக்காகும் ரூ.10, ரூ.20 ஆகிய குறைந்த மதிப்புள்ள நோட்டுகளில் இச் சோதனை முதற்கட்டமாகத் தொடங்கப்பட வாய்ப்புள்ளது.

புதிய பிளாஸ்டிக் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்படுவதால் தற்போது புழக்கத்திலுள்ள காகித ரூபாய் நோட்டுகள் செல்லாததாகி விடாது. காகித நோட்டுகளும் புதிய பிளாஸ்டிக் நோட்டுகளும் தங்குதடையின்றி இணையாகவே புழக்கத்தில் இருக்கும் என்றும், காகித நோட்டுகள் படிப்படியாகவே மாற்றப்படும் என்றும் அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

உலகளாவிய நிறுவனங்களுக்கு அழைப்பு:

பிளாஸ்டிக் நோட்டுகளைத் தயாரிக்கத் தேவையான பிரத்யேகத் தாள்களை வழங்க உலகளாவிய நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கியின் நோட்டு அச்சிடும் பிரிவு அழைப்பு விடுத்துள்ளது. அதிநவீன பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட இத் தாள்களை வழங்க விண்ணப்பிக்க ஆகஸ்ட் 18 கடைசி நாளாகும்.
பிளாஸ்டிக் நோட்டுகளின் சிறப்பம்சங்கள்:

சாதாரண காகித நோட்டுகளை விட பிளாஸ்டிக் நோட்டுகள் நீண்ட காலம் உழைக்கும். இவை தண்ணீர், அழுக்கு, எண்ணெயால் எளிதில் பாழாகாது. இவற்றை நகல் எடுப்பது மிகக் கடினம் என்பதால் கள்ள நோட்டுப் புழக்கத்தை முற்றிலுமாகத் தடுக்க முடியும்.

ஆஸ்திரேலியா, கனடா, பிரிட்டன் போன்ற நாடுகள் ஏற்கனவே இப் பாலிமர் நோட்டு முறையைப் பயன்படுத்தி வருகின்றன. இருப்பினும் இப் புதிய சோதனை முயற்சி குறித்து ரிசர்வ் வங்கி தரப்பில் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory