» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
மேகதாது அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை: மத்திய அமைச்சர் சொல்கிறார்!
செவ்வாய் 28, ஜூலை 2026 10:26:08 AM (IST)

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்குத் தமிழ்நாடு உள்ளிட்ட பிற மாநிலங்களின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்று உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் எங்கும் குறிப்பிடப்படவில்லை என மத்திய அரசு மாநிலங்களவையில் தெளிவுபடுத்தியுள்ளது.
நாடாளுமன்ற மாநிலங்களவையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எழுத்துப்பூர்வமாகக் கேள்விகளை எழுப்பிருந்தார். அதில், "காவிரி நீர் தொடர்பான பிரச்சனையில் கடந்த 2018-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி, கர்நாடகா காவிரி ஆற்றின் குறுக்கே எந்தவொரு கட்டமைப்பையும் அமைக்கத் தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்பது மத்திய அரசின் கவனத்திற்கு வந்துள்ளதா? மேகதாது திட்டத்திற்கு கர்நாடகா ஒப்புதல் பெற்றுள்ளதா? இத்திட்டத்தின் தற்போதைய நிலை என்ன?" என்று வினவியிருந்தார்.
மத்திய ஜல்சக்தி துறை இணை அமைச்சர் பதில்:
இக்கேள்விகளுக்கு மத்திய ஜல்சக்தி துறை இணை அமைச்சர் ராஜ் பூஷண் சவுத்ரி அளித்துள்ள எழுத்துப்பூர்வ பதில்:"காவிரி நீர் விவகாரத்தில் கடந்த 2018 பிப்ரவரி 16-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி, காவிரி ஆற்றின் குறுக்கே எந்தவொரு கட்டமைப்பையும் அமைக்கக் கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை.
மேலும், அத்தீர்ப்பில் 2007-ஆம் ஆண்டு காவிரி நீர் தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பின் 18-வது பிரிவு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதன்படி, எந்தவொரு மாநிலமும் தனது எல்லைக்குள் இருக்கும் நீரைப் பயன்படுத்துவதையோ அல்லது ஒழுங்குபடுத்துவதையோ தீர்ப்பாயத்தின் உத்தரவு பாதிக்காது. தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு முரணாக இல்லாத வகையில், அந்த மாநில எல்லைக்குள் உள்ள நீரின் பயன்களை அனுபவிக்கும் உரிமை அந்தந்த மாநிலத்திற்கு உண்டு."
மேகதாது நீர்த்தேக்கம் மற்றும் குடிநீர்த் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையைக் கர்நாடக அரசு கடந்த 2019-ஆம் ஆண்டு சமர்ப்பித்தது. எனினும், காவிரி நீர் தீர்ப்பாயத்தின் தீர்ப்பிற்கு இணங்கவும், மத்திய நீர்வள ஆணையத்தின் வழிகாட்டுதல்களின்படியும் திருத்தப்பட்ட புதிய திட்ட அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு கோரி, அந்த அறிக்கை திட்ட அதிகாரிகளிடம் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேலும், காவிரி நீர் பங்கீடு தொடர்பாகக் காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழு மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் ஆகியவை இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை நிலவரத்தை ஆய்வு செய்து, தமிழகத்திற்கு உரிய தண்ணீரைத் திறந்து விடுமாறு கர்நாடக அரசுக்குத் தொடர்ச்சியாக உத்தரவிட்டு வருவதாகவும் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்தியாவில் புழக்கத்திற்கு வருகிறது பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்: காகித நோட்டுகள் செல்லுமா?
செவ்வாய் 28, ஜூலை 2026 5:43:22 PM (IST)

நீட் போராட்டம்: மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கூடாது - உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
செவ்வாய் 28, ஜூலை 2026 5:14:11 PM (IST)

கட்டுப்பாடுகளைத் தளர்த்த வேண்டும்: முதல்வர் விஜய்க்கு கேரள முதல்வர் சதீசன் கடிதம்!
செவ்வாய் 28, ஜூலை 2026 4:54:10 PM (IST)

ராகுல் காந்தி வெளிநாட்டுச் சக்திகளின் ஊதுகுழல்: பாஜக எம்பி நிஷிகாந்த் துபே கடும் தாக்கு!
செவ்வாய் 28, ஜூலை 2026 10:54:59 AM (IST)

டெல்லியில் மாணவர்கள் மீது தடியடி: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கடும் கண்டனம்!
திங்கள் 27, ஜூலை 2026 12:28:52 PM (IST)

தேர்வுச் சீர்திருத்தங்களுக்காக நந்தன் நிலேகனி தலைமையில் உயர்மட்டக் குழு: பிரதமர் அறிவிப்பு!
ஞாயிறு 26, ஜூலை 2026 8:55:03 PM (IST)


