» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

வங்கிகளுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்கோத்ரா அறிவிப்பு!

வியாழன் 6, ஆகஸ்ட் 2026 8:38:12 AM (IST)

இந்திய ரிசர்வ் வங்கி தனது கொள்கை ரீதியான 'ரெப்போ' வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யாமல், தொடர்ந்து 4-வது முறையாக 5.25 சதவீதமாகவே நீடிக்கும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்கோத்ரா அறிவித்துள்ளார்.

ஈரான் போர் காரணமாகச் சர்வதேச அளவில் எரிசக்தி விலை உயர்வு மற்றும் அதன் விளைவாக ஏற்படக்கூடிய பணவீக்கம் குறித்த தெளிவான சூழல் உருவாகும் வரை காத்திருக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்கோத்ரா தலைமையிலான 6 பேர் கொண்ட பணவியல் கொள்கைக் குழு (MPC) இந்த முடிவை ஒருமனதாக எடுத்துள்ளது. மேலும், மத்திய வங்கி தனது நடுநிலையான கொள்கை நிலைப்பாட்டையே தொடர்ந்து பின்பற்றும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியாளர்கள் சந்திப்பில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்கோத்ரா பேசியதாவது: வட்டி விகிதம் உயராத நிலை: இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற அண்டை நாடுகளின் மத்திய வங்கிகள் போர் சூழல் மற்றும் எரிசக்தி விலை உயர்வால் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளன. ஆனால், இந்தியா தனது வட்டி விகிதத்தை உயர்த்தாமல் நிலைநிறுத்தியுள்ளது.

மூலதன வரவை ஈர்க்கவும், ரூபாயின் மதிப்பை வலுப்படுத்தவும் முந்தைய கொள்கைக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட நடவடிக்கைகளையே ரிசர்வ் வங்கி நம்பியுள்ளது. உணவு மற்றும் எரிபொருள் விலை உயர்வால் வரும் காலங்களில் பணவீக்கம் சற்று அதிகரித்து, நடப்பு நிதியாண்டின் 3-வது காலாண்டில் உச்சத்தைத் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், விலைமதிப்பற்ற உலோகங்களைத் தவிர்த்த ஏனைய பொருட்களின் பணவீக்கம் கட்டுக்குள்ளேயே உள்ளது.

பணவீக்கத்தை நிர்ணயிக்கப்பட்ட இலக்கிற்குள் கொண்டு வருவதில் ரிசர்வ் வங்கி உறுதியாக உள்ளது. அதே நேரத்தில் பணவீக்கத்தின் போக்கையும் உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம்.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்த கணிப்பு, கடந்த ஜூன் மாதத்தில் 6.6 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது 6.7 சதவீதமாகச் சற்று உயர்த்தப்பட்டுள்ளது. உள்நாட்டுத் தேவை அதிகரிப்பு, உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளின் சிறப்பான செயல்பாடு மற்றும் வலுவான ஏற்றுமதி ஆகியவற்றின் காரணமாக இந்தியப் பொருளாதாரம் விரைவாக மீண்டு வருகிறது எனத் தெரிவித்தார்..


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory