» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தம்பதிக்கு விவாகரத்து: உச்ச நீதிமன்றம் ஒப்புதல்!

சனி 1, ஆகஸ்ட் 2026 12:55:59 PM (IST)

Omarabdulladivorce.jpg

ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சரும், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவருமான உமர் அப்துல்லா மற்றும் அவரது மனைவி பாயல் இடையேயான திருமண பந்தத்தை ரத்து செய்து விவாகரத்து வழங்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

உமர் அப்துல்லா கடந்த 1994-ஆம் ஆண்டு பாயல் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மனக்கசப்பு மற்றும் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் தனித்தனியாகப் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

தொடர்ந்து, மனைவி பாயல் தன்னை நியாயமற்ற முறையில் நடத்தியதால் மன உளைச்சலும் துன்புறுத்தலும் ஏற்பட்டதாகக் கூறி உமர் அப்துல்லா குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து மனுத் தாக்கல் செய்தார். ஆனால், இக்குற்றச்சாட்டுகளுக்குப் போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி, 2016-இல் விவாகரத்து மனுவை குடும்ப நல நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதனை எதிர்த்து உமர் அப்துல்லா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை 2023-இல் டெல்லி உயர் நீதிமன்றமும் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, உமர் அப்துல்லா தனது திருமணத்தை ரத்து செய்து விவாகரத்து வழங்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் இரு மேல்முறையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்தார்.

இவ்வழக்கு நீதிபதிகள் நரசிம்மா மற்றும் அலோக் அராதே அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, உமர் அப்துல்லா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல்: "தம்பதியர் இருவருக்கும் இடையிலான அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வு காணப்பட்டுவிட்டது. இருவரும் சுதந்திரமாக வாழ முடிவெடுத்துள்ளனர். எனவே, இந்திய அரசியல் சட்டப்பிரிவு 142-ன் கீழ் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி இவர்களது திருமணத்தை ரத்து செய்து விவாகரத்து வழங்கலாம்" என வாதிட்டார்.

இவ்வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், உமர் அப்துல்லா - பாயல் தம்பதியின் திருமணத்தை ரத்து செய்து விவாகரத்து வழங்க ஒப்புதல் அளித்தனர். "இதனைத் தீர்ப்பின் ஒரு பகுதியாகச் சேர்த்து வழக்கினை முடித்து வைக்கிறோம்" எனத் தெரிவித்த நீதிபதிகள், அடுத்தகட்ட நடைமுறைகளுக்காக வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory