» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

நீட் வினாத்தாளை பேராசிரியர்களே விற்றனர்: சிபிஐ குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சித் தகவல்!

சனி 8, ஆகஸ்ட் 2026 12:10:37 PM (IST)

தேசிய தேர்வு முகமையின் வினாத்தாள் தயாரிப்புக் குழுவில் இடம்பெற்றிருந்த பேராசிரியர்களே பணத்திற்காக நீட் தேர்வின் வினாத்தாளை விற்பனை செய்துள்ளனர் என்று சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மருத்துவ இளநிலைப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே 3-ம் தேதி நடைபெற்றது. இத்தேர்வின் வினாத்தாள் முன்கூட்டியே கசிந்தது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தேர்வு ரத்து செய்யப்பட்டு ஜூன் 21-ம் தேதி மறுதேர்வு நடத்தப்பட்டது.

இவ்வழக்கை விசாரித்து வரும் சிபிஐ அமைப்பின் 72 மூத்த அதிகாரிகள் மற்றும் 8 தடயவியல் நிபுணர்கள் அடங்கிய குழு தீவிர விசாரணை நடத்தி வருகிறது. டெல்லி ரோஸ் அவென்யூ வளாகத்தில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் ஜூலை 28-ம் தேதி சிபிஐ சார்பில் 94 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இவ்வழக்கில் NTA வினாத்தாள் தயாரிப்புக் குழுவைச் சேர்ந்த தாவரவியல் பேராசிரியை மணிஷா குருநாத், வேதியியல் பேராசிரியர் பி.வி.குல்கர்னி, இயற்பியல் பேராசிரியை மணிஷா சஞ்சய் ஹவல்தார், பயிற்சி மைய இயக்குநர் சிவராஜ் ரகுநாத், இடைத்தரகர்கள் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிபிஐ குற்றப்பத்திரிகையில் கூறியிருப்பதாவது:NTA வினாத்தாள் தயாரிப்புக் குழுவில் இருந்த 3 பேராசிரியர்களும் வினாக்களை மனப்பாடம் செய்துள்ளனர். பின்னர் தாங்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்குத் திரும்பி, வினாக்களைக் கைப்பட எழுதியுள்ளனர்.

இந்த கையெழுத்துப் பிரதியை மகாராஷ்டிராவைச் சேர்ந்த இடைத்தரகருக்குப் பெரும் தொகைக்கு விற்றுள்ளனர். அவரிடமிருந்து ஹரியானா இடைத்தரகர்கள் மூலமாக டெலிகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் வழியாக மாணவர்களுக்கு ஒரு வினாத்தாள் ரூ.12 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது.

வினாத்தாள் கசிவு தொடர்பாக டெல்லி, ஹரியானா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இதுவரை 92 இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. மேலும், 360 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு, குற்றஞ்சாட்டப்பட்டவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட மொபைல் போன்கள், லேப்டாப்கள் உள்ளிட்ட மின்னணு சாதன ஆதாரங்களுடன் 20,000 பக்க ஆவணங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகச் சிபிஐ தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory