» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மண்வெட்டி கணையால் மகளை அடித்துக்கொன்ற தந்தை : நெல்லையில் பயங்கரம்!

புதன் 18, ஜூன் 2025 3:58:31 PM (IST)

நெல்லையில் மண்வெட்டி கணையால் மகளை தந்தை அடித்துக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் மேலகருங்குளம் சிவாஜிநகர் விரிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் காளிமுத்து. இவர் கட்டட தொழிலாளி. இவருடைய மனைவி ஜெயலட்சுமி (50). இவரது பராமரிப்பில் அவரது தந்தை வேல் (78) இருந்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று(ஜூன் 17) காலையில் காளிமுத்து வேலைக்கு சென்று விட்டார். மாலை 6 மணிக்கு வீட்டுக்கு வந்து பார்த்தபோது அங்கு ஜெயலட்சுமி முகம் மற்றும் பின்புற தலையில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த மேலப்பாளையம் போலீசார் அங்கு விரைந்து வந்து பார்த்தபோது ஜெயலட்சுமி கட்டையால் அடித்துக்கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் அவரை கொலை செய்தது யார்? என்பது குறித்து போலீசார் விசாரித்தனர். எப்போதும் வீட்டிலேயே இருக்கும் ஜெயலட்சுமியின் தந்தை வேல் மாயமாகி இருந்ததால், அவர் கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் அவரைத் தேடினர். அவரை இரவில் போலீசார் பிடித்து விசாரித்ததில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

ஜெயலட்சுமியின் மகன் திருப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இதனால் ஜெயலட்சுமி தனது தந்தையை வீட்டில் வைத்து கவனித்து வந்துள்ளார். தந்தை-மகளுக்கு இடையே அவ்வப்போது தகராறு நடந்து வந்ததாகக் கூறப்படுகிறது. அவருக்கு சமீபத்தில் கண் புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. 

மேலும் வயது முதிர்ச்சியால் அவருக்கு பல்வேறு உடல் நல பிரச்னைகள் இருந்தபோதிலும் ஜெயலட்சுமி முகம் கோணாமல் கவனித்து வந்துள்ளார். எனினும் தன்னை சரியாக கவனிக்கவில்லை என்றுகூறி அடிக்கடி அவர் தனது மகளுடன் தகராறு செய்து வந்துள்ளார். நேற்று வேலுவுக்கு சாப்பாடு கொடுத்துவிட்டு ஜெயலட்சுமி வீட்டில் தூங்கி கொண்டிருந்தார்.

அப்போது உணவை சாப்பிட்டுவிட்டு அமர்ந்திருந்த வேல் திடீரென வீட்டுக்குள் சென்று, மகள் என்றும் பாராமல் மண் வெட்டி கணையால் தனது மகளை சரமாரியாக அடித்துக்கொலை செய்துவிட்டு மேலப்பாளையம் காவல் நிலையத்துக்கு நடக்க முடியாமல் நடந்து சென்றுள்ளார்.

ஒருகட்டத்தில் அவரால் மேற்கொண்டு நடக்க முடியாததால், காவல் நிலையத்திற்கு மேல் பகுதியில் மரத்தடி நிழலில் இருந்துள்ளார் என்ற விபரம் தெரியவந்தது.

இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மகளையே தந்தை கொலை செய்த சம்பவம் நெல்லை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory