» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
மாலியில் கடையநல்லூர் தொழிலாளர்கள் கடத்தல் : குடும்பத்தினர் கண்ணீர் மல்க கோரிக்கை!
திங்கள் 10, நவம்பர் 2025 10:09:20 AM (IST)
ஆப்பிரிக்க நாடான மாலியில் கடத்தப்பட்ட கடையநல்லூர் தொழிலாளர்கள் 2 பேரை உடனே மீட்க வேண்டும் என குடும்பத்தினர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. அதேபோல் அல்-கொய்தா, ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய பல்வேறு கிளர்ச்சி குழுக்களும் அங்கு ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இந்த நிலையில் அங்குள்ள கோப்ரி நகரில் இந்திய தொழிலாளர்கள் சிலர் மின்மயமாக்கல் திட்டத்தின் கீழ் தொழிலாளர்களாக வேலை பார்த்துவந்தனர்.
அப்போது அங்கு சென்ற ஆயுத கும்பல், 5 இந்தியர்களை கடத்தி சென்றது. அவர்களை மீட்பதற்கான முயற்சியில் அங்குள்ள இந்திய தூதரகம் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் ஆயுத கும்பல் கடத்திச் சென்றவர்களில் 2 பேர் தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்ற விவரம் தெரியவந்தது. அதாவது, தென்காசி மாவட்டம் கடையநல்லூர் முத்துகிருஷ்ணாபுரம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த இசக்கி ராஜா (வயது 36) ஆவார்.
இவருக்கு திருமணமாகி பிரவீனா என்ற மனைவியும், ஒரு ஆண், பெண் குழந்தையும் உள்ளது. கடந்த 8 மாதங்களுக்கு முன்பு உறவினர் ஒருவர் மூலம் இசக்கிராஜா மாலி நாட்டுக்கு சென்றார்.இதேபோல் மற்றொரு நபர் கடையநல்லூர் புதுக்குடி பஞ்சாயத்து கண்மணியாபுரம் கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் மகன் தளபதி சுரேஷ் (26) ஆவார்.
இவர்கள் உள்பட 5 இந்தியர்களையும், ஆயுத கும்பல் பணய கைதியாக கடத்தி வைத்திருப்பதாக கூறப்படும் நிலையில் அவர்களை உடனே மீட்க பிரதமர் மோடி, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடும்பத்தினர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து இசக்கி ராஜாவின் மனைவி பிரவீனா கூறியதாவது: மாலி நாட்டில் வேலை செய்த இந்தியர்கள் கடத்தல் என்ற செய்தி வெளியாகியிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தேன். அப்போதுதான், எனது கணவரை ஆயுத கும்பல் கடத்தி விட்டது தெரிய வந்தது. இதுகுறித்து தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மனு அனுப்பி உள்ளேன். கடத்தப்பட்ட எனது கணவரை உடனடியாக மீட்டு தர வேண்டும். இவ்வாறு அவர் கண்ணீர் மல்க கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கு: சுர்ஜித் தாயாரை கைது செய்ய பிடிவாரண்ட்!
சனி 15, நவம்பர் 2025 12:44:52 PM (IST)

நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கோலாகலம் : திரளானோர் தரிசனம்!
சனி 15, நவம்பர் 2025 11:51:49 AM (IST)

கொலை முயற்சி, வழிப்பறியில் ஈடுபட்டவர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது!
வெள்ளி 14, நவம்பர் 2025 5:31:34 PM (IST)

கூத்தன்குழியில் நவ.21ல் கடலம்மா மாநாடு : சீமான் அறிவிப்பு
வியாழன் 13, நவம்பர் 2025 4:29:46 PM (IST)

தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா தேரோட்டம் கோலாகலம்
வியாழன் 13, நவம்பர் 2025 12:44:11 PM (IST)

மதுவில் விஷம் கலந்து கொடுத்து பள்ளி ஆசிரியர் கொலை : பெண் உட்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை
புதன் 12, நவம்பர் 2025 5:50:21 PM (IST)




