» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நம்பிக்கையோடு உங்கள் கனவை சொல்லுங்கள்! நிறைவேற்றி தருவோம்! -கனிமொழி எம்பி

வெள்ளி 9, ஜனவரி 2026 3:35:16 PM (IST)


நம்பிக்கையோடு உங்கள் கனவை சொல்லுங்கள்! அதனை நிச்சயமாக நாங்கள் நிறைவேற்றி தருவோம் என்று தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தெரிவித்தார். 
 
முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் இன்று திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், பாடியநல்லூரில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழ்நாடு அரசின் "உங்க கனவ சொல்லுங்க!" என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாநகராட்சி மாநாட்டு மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் முன்னிலையில், ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில் கலந்து கொண்டு விழா பேரூரையாற்றி, இந்த திட்டத்தில் கள ஆய்வுப் பணியில் ஈடுபடவுள்ளவர்களுக்கு அடையாள அட்டை, தொப்பி, கனவு அட்டை மற்றும் விண்ணப்ப படிவம் ஆகியவற்றை வழங்கினார். 

நிகழ்ச்சியில் கனிமொழி எம்பி தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர்"உங்க கனவைச் சொல்லுங்கள்” என்ற திட்டத்தை துவக்கி வைத்துள்ளார்கள். அதன்தொடர்ச்சியாக தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெறுகின்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கின்ற அனைவருக்கும் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

இதுவரை யாரும் கேள்விப்பட்டிராத திட்டமான, குறிப்பாக அரசு நமது வீட்டைத் தேடிவந்து, உங்களுக்கு என்ன தேவை? உங்களுடைய கனவு என்ன? உங்களுக்கு என்ன வேண்டும்? நாங்கள் செய்துதர தயாராக இருக்கின்றோம் என்று சொல்லக்கூடிய ஒரு நிலையை நாம் வேறு எங்கும் பார்த்தது இல்லை.தமிழ்நாடு முதலமைச்சர்சற்று முன்னால் உங்களுடன் பேசிய பொழுது, என்னென்ன திட்டங்கள் எல்லாம் பெண்களுக்காக செயல்படுத்தப்பட்டு வருகிறது என்பதை தெளிவாக எடுத்துரைத்தார்கள். 

இந்த ஆட்சி பெண்களுக்கான ஆட்சி என்று நான் எப்பொழுதும் சொல்வது உண்டு. பெண்களுக்காக பல திட்டங்களை செயல்படுத்துகிறார்கள். குறிப்பாக கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், மகளிர் விடியல் பயணம், புதுமைப்பெண் திட்டம், தோழி விடுதி, மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான திட்டங்கள் என்று பட்டியலிடலாம். மேலும், பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் என்று பல்வேறு திட்டங்களைதமிழ்நாடு முதலமைச்சர்நமக்காக குறிப்பாக பெண்களுக்காக செய்து கொண்டிருக்கிறார்கள். 

அதன்தொடர்ச்சியாக, நாங்கள் இத்தனை திட்டங்களை செய்திருக்கிறோம். ஆனால் இத்திட்டங்களில் யாராவது விடுபட்டிருக்கிறீர்களா? யாருடைய தேவைகளையாவது நாங்கள் நிறைவேற்ற தவறி விட்டோமா? என்று ஒரு அரசாங்கம் நமது வீடு தேடி வந்து கேட்கக்கூடிய திட்டம் தான் "உங்க கனவைச் சொல்லுங்கள்” என்பதாகும். அதன்படி, இன்று நமக்கு ஒரு படிவம் வழங்கப்பட்டிருக்கிறது. அந்த படிவத்தில் இருக்கக்கூடிய விவரங்களை நாம் பூர்த்தி செய்து வழங்க வேண்டும். அதில் நமது எதிர்பார்ப்புகளான, நமக்கு வீடு தேவை என்றால் அதன் விவரங்களையும், தொழில் தொடங்குவதற்கு கடனுதவிகள், குறிப்பாக நான் முதல்வன் திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்புக்கான பயிற்சிகள் வழங்கப்படுகிறது, 

மேலும் தமிழ்புதல்வன் திட்டம், புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்ட அனைத்தையும் கடந்து பிள்ளைகளுக்கு கல்விக்கான உதவிகள், மருத்துவ உதவிகள் மற்றும் இதர தேவைகள் உள்ளிட்டவற்றை அந்த படிவத்தில் பூர்த்தி செய்து, தெரிவிக்கும்பட்சத்தில்தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு நம்முடைய கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். கேட்டால் செய்து தரக்கூடிய ஆட்சி நமது திராவிட மாடல் ஆட்சி, முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர்கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி கொண்டிருக்க கூடியவர்கள் நாம். அந்தவழியில் "உங்க கனவைச் சொல்லுங்கள்” என்ற சிறப்பான திட்டத்தைதமிழ்நாடு முதலமைச்சர்துவக்கி வைத்துள்ளார்கள். 

மேலும் நீங்கள் எழுதி கொடுத்த படிவத்தை அப்படியே விட்டுவிடாமல், க்யூ ஆர் கோடு பொருத்தப்பட்ட அட்டை ஒன்றை உங்களுக்கு கொடுப்பார்கள். அதில் நீங்கள் எழுதி கொடுத்திருக்கக்கூடிய கனவு அதாவது உங்கள் கோரிக்கை என்ன நிலையில் உள்ளது? எந்த அளவிற்கு நடவடிக்கை எடுத்துள்ளார்கள்? என்பதை அந்த க்யூ ஆர் கோட்டை ஸ்கேன் செய்யும்பொழுது நாம் தெரிந்து கொள்ள முடியும். எனவே, நீங்கள் கொடுக்க கூடிய படிவத்தின் நிலை என்ன? நாங்கள் உங்களுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டிருக்கின்றோம் என்பதைச் சொல்லக்கூடியது தான் இந்த அட்டை. அதனால் நம்பிக்கையோடு உங்கள் கனவை சொல்லுங்கள்! அதனை நிச்சயமாக நாங்கள் நிறைவேற்றி தருவோம்! திராவிட மாடல் ஆட்சி சொன்ன சொல்லை என்றும் நிறைவேற்றக் கூடிய ஆட்சியாகும். உங்கள் அனைவருக்கும் எனது பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் எனதூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு கனிமொழி கருணாநிதிதெரிவித்தார்கள். 

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர்பி.கீதா ஜீவன்தெரிவித்ததாவது:நம்முடையதமிழ்நாடு முதலமைச்சர்தொடங்கி வைத்த இந்த சிறப்பான திட்டம் கிட்டத்தட்ட 1 கோடியே 91 இலட்சம் குடும்பங்களை சென்று சேரக்கூடிய திட்டமாகும்.இத்திட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் போல், தன்னார்வலர்கள் மூலம் ஒவ்வொரு குடும்பங்களுக்கும் படிவங்கள் வழங்கப்படும். அதில் என்னென்ன திட்டங்கள் வாயிலாக பயனடைந்து இருக்கிறோம் என்பதையும், மேலும் நமக்கு என்ன தேவை என்பதையும் படிவத்தில் பூர்த்தி செய்ய வேண்டும். 

வீடு இல்லை என்றால் குடியிருப்பதற்கு வீடு தேவை என்பதையும், என்னென்ன திட்டங்களில் உங்களுக்கு தேவை உள்ளது? என்பதையும், உயர்கல்வி படிக்க வைப்பதற்கான உதவிகள்,மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை உள்ளிட்ட இதுபோன்ற தேவைகளை இந்த படிவத்தில் பூர்த்தி செய்து வழங்க வேண்டும் என்று புது முயற்சியாக இத்திட்டத்தினை துவக்கி வைத்துள்ளார்கள். மக்களிடமிருந்து இந்த கோரிக்கைகளை பெற்று, அதன்மூலம் திட்டமிடுதல் என்ற உயர்ந்த நோக்கத்தோடுதமிழ்நாடு முதலமைச்சர்இத்திட்டத்தினை வடிவமைத்துள்ளார்கள். 

தமிழ்நாடு முழுவதும் உள்ள 1 கோடியே 91 இலட்சம் குடும்பங்களை சந்திப்பதற்காக 50 ஆயிரம் தன்னார்வலர்களை கொண்டு வீடு வீடாகச் சென்று படிவங்களை வழங்குவதற்காக பணியமர்த்தம் செய்யப்பட்டுள்ளனர். இத்திட்டம் இன்று முதல் தொடங்கி பிப்ரவரி 09 அன்றுடன் நிறைவடையும். எனவே, உங்கள் வீட்டிற்கு படிவம் வந்தவுடன் அதனை பூர்த்தி செய்யலாம், பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தினை சேகரிப்பதற்கும் தன்னார்வலர்கள் வருவார்கள். உங்களுடைய பகுதியில் உள்ள கோரிக்கைகளையும் நீங்கள் குறிப்பிடலாம். 

உங்கள் கோரிக்கையின் நிலை என்ன என்பதை அறிந்து கொள்வதற்காக க்யூ ஆர் கோடு பொருத்தப்பட்ட அட்டையினை வழங்குவார்கள். அதன்மூலம் க்யூ ஆர் கோட்டினை ஸ்கேன் செய்யும்பொழுது உங்கள் கோரிக்கை மனுவின் நிலை என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம். இச்சிறப்பான திட்டத்தைதமிழ்நாடு முதலமைச்சர்தொடங்கி வைத்துள்ளார்கள். உங்கள் ஒத்துழைப்பை தாருங்கள். உங்கள் கோரிக்கைகளை தெரிவிக்கும் பொழுது நமதுதமிழ்நாடு முதலமைச்சர்நிச்சயமாக நிறைவேற்றி தருவார்கள் என தெரிவித்தார். 

இந்நிகழ்ச்சியில்மேயர் பெ.ஜெகன், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) நாகராஜன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் செந்தில்வேல் முருகன், உதவி திட்ட அலுவலர் அருண் பிரசாத், அரசு துறைச் சார்ந்த அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து

MAKKALJan 9, 2026 - 05:21:12 PM | Posted IP 162.1*****

மகளிர் உதவித் தொகை எங்களுக்கு இன்னும் வரவில்லை. வீடு, கார், ஆண், பெண் இருவரும் வேலை பார்க்கும் குடும்பத்திற்கெல்லாம் மகளிர் உதவித்தொகை வருகிறது. ஆனால் கணவன் இல்லாத குடும்பத்திற்கு உதவித்தொகை வரவில்லை. வீட்டிற்கு வந்தால் மட்டும் குறையெல்லாம் சரியாகி விடுமா? வுந்து கேட்பார்கள். ஆனால் ஒரு திட்டமும் ஏழை மக்களை சென்றடையாது. வுசதிவாய்ப்புள்ளவர்கள், கட்சியில் உள்ளவர்கள், அவர்களுக்கு சொந்தகாரர்கள், ஆள்பலம் உள்ளவர்கள் எல்லாம் அரசின் அனைத்து திட்டங்களிலும் பயன் பெறுவர். ஆனால் ஏழைகள் என்றும் எந்த ஒரு திட்டத்திலும் பயன்பெற மாட்டார்கள். அநேக முறை விண்ணப்பித்தும் ஒரு பயனும் இல்லை. அரசு அலுவலகத்தில் கேட்டால் அலைய விடுகிறார்கள். நல்ல ஆட்சியா? பாரபட்சமுள்ளஆட்சியா?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory