» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கவிஞர் மு.மேத்தா, பாடகி பி. சுசீலாவுக்கு விருது : முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்!
வெள்ளி 4, அக்டோபர் 2024 4:01:05 PM (IST)

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு நினைவினைப் போற்றிடும் வகையில் கவிஞர் மு.மேத்தா, பின்னணிப் பாடகி பி. சுசீலா ஆகியோருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் விருதுகளை வழங்கினார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (அக். 4) தலைமைச் செயலகத்தில், தமிழ்த் திரையுலகில் சிறந்து விளங்கிடும் வாழ்நாள் சாதனையாளர்களைப் போற்றிப் பாராட்டிடும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில் 2023-ஆம் ஆண்டிற்கான 'கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது'களை கவிஞர் மு. மேத்தாவுக்கும், பின்னணிப் பாடகி பி. சுசீலாவுக்கும் வழங்கிச் சிறப்பித்தார்.
செய்தி மக்கள் தொடர்புத் துறையின் 2022-2023 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், தமிழ்த் திரையுலகில் சிறந்து விளங்கிடும் வாழ்நாள் சாதனையாளர்களைப் போற்றிப் பாராட்டிடும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயரில் 'கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது' ஒவ்வொரு ஆண்டும் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் மாதம் 3-ஆம் தேதி வழங்கப்படும் என்றும், தேர்ந்தெடுக்கப்படும் விருதாளர்களுக்கு 10 லட்சம் ரூபாயும், நினைவுப் பரிசும் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பினைச் செயல்படுத்துகின்ற வகையில், முதல்வரின் உத்தரவின்பேரில், விருதாளர்களைத் தேர்வு செய்யும்பொருட்டு, திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் தலைமையில், நடிகர் சங்கத் தலைவர் நாசர், திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன் ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
அக்குழுவின் பரிந்துரையின்படி 2022-ஆம் ஆண்டிற்கான விருதிற்கு தெரிவு செய்யப்பட்ட திரைப்படத்துறையில் சுமார் 500 திரைப்படங்களுக்கு மேல் கதை, திரைக்கதை, வசனம் எழுதிப் புகழ்பெற்ற ஆரூர்தாஸ் அவர்களுக்கு கடந்த 3.6.2022 அன்று விருது வழங்கப்பட்டது.
தொடர்ந்து முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, வழக்கமாக வழங்கப்படும் 'கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது'டன், சிறப்பினமாகப் பெண்மையைப் போற்றும் வகையில் இந்த ஆண்டு கூடுதலாக ஒரு பெண் திரைக் கலைஞருக்கும் இந்த விருதினை வழங்கிச் சிறப்பித்திட முதல்வர் 11.07.2024 அன்று உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி, திரையுலகில் 20,000-க்கும் மேற்பட்ட பலமொழிப் பாடல்களைப் பாடியவரும், "தென்னிந்தியாவின் இசைக்குயில்” என்றும், "மெல்லிசை அரசி” என்றும் பாராட்டப்பட்டவருமான திரைப்படப் பின்னணிப் பாடகி பி.சுசீலாவுக்கும், தமிழ்ப் பேராசிரியரும், புதுக்கவிதைக்கு ஏற்றம் தந்தவரும், சாகித்ய அகாடமி விருது பெற்றவருமான கவிஞர் மு.மேத்தாவுக்கும், 2023-ஆம் ஆண்டிற்கான 'கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது'கள் வழங்கப்படும் என்று முதல்வர் 24.9.2024 அன்று அறிவிப்பு வெளியிட்டார்.
அந்த அறிவிப்பின்படி, இன்று கவிஞர் மு. மேத்தா, பின்னணி பாடகி பி.சுசீலா ஆகியோருக்கு 2023-ஆம் ஆண்டிற்கான விருதுடன் தலா 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையும், நினைவுப் பரிசும் வழங்கிச் சிறப்பித்தார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் வே. ராஜாராமன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் மரு. இரா. வைத்திநாதன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.விருது பெறுவதற்கு முன்னர் பாடகி பி. சுசீலா, முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் நீண்ட நேரம் பேசினார். பின்னர் முதல்வர் முன்பாக தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலைப் பாடினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தைப்பூச இருமுடி விழா: மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் 57 எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிற்கும்!
ஞாயிறு 16, நவம்பர் 2025 1:28:56 PM (IST)

கனமழை எச்சரிக்கை: நெல்லை-தூத்துக்குடி உள்பட 10 மாவட்டங்களுக்கு விரைந்த பேரிடர் மீட்பு படை
ஞாயிறு 16, நவம்பர் 2025 11:41:16 AM (IST)

நடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் : பெண் சிக்கினார்
ஞாயிறு 16, நவம்பர் 2025 11:39:41 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு: 2,632 பேர் எழுதினர்; 404 பேர் வரவில்லை!
ஞாயிறு 16, நவம்பர் 2025 11:32:55 AM (IST)

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதி : பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சு
ஞாயிறு 16, நவம்பர் 2025 9:05:57 AM (IST)

தூத்துக்குடியில் பள்ளத்தில் பதிந்து நின்ற லாரியால் பரபரப்பு : போக்குவரத்து பாதிப்பு
சனி 15, நவம்பர் 2025 8:22:32 PM (IST)




