» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
காவலர்களிடையே பாரபட்சம் காட்டும் உத்தரவை திரும்பப்பெற வேண்டும்: இபிஎஸ் வலியுறுத்தல்!
திங்கள் 23, ஜூன் 2025 5:43:04 PM (IST)
தமிழகக் காவல்துறை காவலர்களிடையே பாரபட்சம் காட்டும் வகையில் வெளியிட்ட பதவி உயர்வு உத்தரவை திரும்பப்பெற வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

தற்போதுள்ள நடைமுறையின்படி, பணியில் சேரும் இரண்டாம் நிலைக் காவலர்கள் 10 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு முதல் நிலைக் காவலர்களாகவும், தொடர்ந்து 5 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு தலைமைக் காவலர்களாகவும், அதனைத் தொடர்ந்து 10 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, அதவாது 25 ஆண்டுகளுக்குப் பிறகு சிறப்பு சார்பு ஆய்வாளர்களாகவும் பதவி உயர்வு பெறுவார்கள்.
இந்நிலையில், 2021 சட்டமன்றப் பொதுத் தேர்தலின்போது தி.மு.க. அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமல், தி.மு.க. அரசு காவல் துறையினருக்கு பதவி உயர்வில் மிகப் பெரிய சலுகை ஒன்றை அளிப்பதுபோல், கடந்த 13.6.2025 அன்று செய்தி வெளியீடு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, இரண்டாம் நிலைக் காவலர்களாக 10 ஆண்டுகளும்; முதலாம் நிலைக் காவலர்களாக 3 ஆண்டுகளும்; பிறகு தலைமைக் காவலர்களாக 10 ஆண்டுகளும் பணிபுரிந்தபின், அதாவது 23 ஆண்டுகால பணிக்குப் பிறகு சிறப்பு சார்பு ஆய்வாளர்களாக பதவி உயர்வு பெறுவார்கள் என்று ஆணை வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, முதலாம் நிலைக் காவலராக 5 ஆண்டுகள் பணியாற்ற வேண்டும் என்பதை, 3 ஆண்டுகளாகக் குறைத்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
'சொன்னதைச் செய்வோம், செய்வதைச் சொல்வோம்' என்று வாயளவில் நாடக வசனம் முழங்கிவிட்டு, 'சொல் வேறு, செயல் வேறு' என்று செயல்படுவதையே வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார், காவல்துறையை கையில் வைத்திருக்கும் பொம்மை முதல்-அமைச்சர் ஸ்டாலின். கடந்த 2021 தி.மு.க. தேர்தல் அறிக்கை எண்.389-ல், 20 ஆண்டுகள் பணிமுடித்த காவலர்களுக்கு சிறப்பு சார்பு ஆய்வாளர்களாக பதவி உயர்வு வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளனர். ஓட்டுக்காக வாக்குறுதி அளிப்பதும், அதிகாரம் கைக்கு வந்தவுடன் அவைகளைக் காற்றிலே பறக்கவிடுவதும் தி.மு.க.விற்கு கை வந்த கலை.
இந்தப் புதிய பதவி உயர்வு உத்தரவால், புதிதாக பணியில் சேரும் காவலர்களுக்கு ஏதாவது பலன் இருக்குமோ, இல்லையோ, 2001-2005 காலகட்டங்களில் பணியில் சேர்ந்த சுமார் 35,000 காவலர்களுக்குப் பதவி உயர்வில் பாதிப்பு ஏற்படும் என்றும், நடைமுறைச் சிக்கல்கள் ஏற்படும் என்றும் காவலர்கள் தெரிவிக்கின்றனர்.
மக்களைக் காக்கும் பணியில் உள்ள பெரும்பாலான காவலர்கள் பாதிக்கப்படக்கூடிய இந்த உத்தரவை திரும்பப்பெற வேண்டும் என்றும், பணியில் உள்ள காவலர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல், 2021-ல் தி.மு.க. அளித்த தேர்தல் வாக்குறுதிப்படி 20 ஆண்டுகள் பணிமுடித்த காவலர்களுக்கு சிறப்பு சார்பு ஆய்வாளர்களாக பதவி உயர்வு வழங்க வேண்டும் என்றும், தி.மு.க. ஸ்டாலின் மாடல் அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

லாக் அப் மரணம் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் : விஜய் வலியுறுத்தல்!
செவ்வாய் 1, ஜூலை 2025 10:37:21 AM (IST)

இஸ்ரோ இன்ஜினியர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை: குடும்ப பிரச்சினையால் விபரீத முடிவு!
செவ்வாய் 1, ஜூலை 2025 8:34:20 AM (IST)

கோயில் காவலர் அஜித்குமாரை தாக்கியது ஏன்? காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் கேள்வி!
திங்கள் 30, ஜூன் 2025 5:21:08 PM (IST)

புதுச்சேரி மாநில பாஜக தலைவராக வி.பி.ராமலிங்கம் பதவியேற்பு
திங்கள் 30, ஜூன் 2025 5:11:50 PM (IST)

தனியார் மருத்துவமனையில் ஆட்சியர் ஆய்வு!
திங்கள் 30, ஜூன் 2025 4:04:27 PM (IST)

தமிழக தொழில்துறை தோல்வியடைந்து விட்டது: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!
திங்கள் 30, ஜூன் 2025 12:36:51 PM (IST)
