» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஓடும் பஸ்சில் இருந்து கண்டக்டரை எட்டி உதைத்த போதை ஆசாமி கைது!
திங்கள் 17, நவம்பர் 2025 8:47:52 AM (IST)
குளச்சல் அருகே ஓடும் பஸ்சில் இருந்து கண்டக்டரை தாக்கி சாலையில் தள்ளிவிட்ட போதை ஆசாமியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
குமரி மாவட்டம் கருங்கல் அருகே உள்ள காக்காவிளையை சேர்ந்தவர் பிஜிலிகர் (44). இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக குளச்சல் பணிமனையில் கண்டக்டராக பணி செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு 7.20 மணிக்கு குளச்சலில் இருந்து குறும்பனை வழியாக கருங்கல் செல்லும் தடம் எண் 88-பி பஸ்சில் பணியில் இருந்தார். அந்த பஸ் குளச்சல் அண்ணாசிலை சந்திப்புக்கு வந்து விட்டு மீண்டும் கருங்கல் செல்ல புறப்பட்டது.
அப்போது குறும்பனை இனிகோ நகரை சேர்ந்த மீன்பிடி தொழிலாளியான ராஜன் (56) என்பவர் பஸ்சில் ஏறினார். அவர் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அவரிடம் கண்டக்டர் பிஜிலிகர் டிக்கெட் எடுக்கும்படி கூறினார். ஆனால் அவர் டிக்கெட் எடுக்க மறுத்து விட்டார். அத்துடன் ராஜன், கண்டக்டரின் சட்டையை பிடித்து தகராறில் ஈடுபட்டார்.
குளச்சல் அரசு மருத்துவமனை முன்பு சென்ற போது திடீரென காலால் எட்டி உதைத்து வெளியே தள்ளினார். இதில் கண்டக்டர் படிக்கட்டு வழியாக சாலையில் விழுந்தார். உடனே டிரைவர் பஸ்சை நிறுத்தினார். எனினும் ஆத்திரம் தீராத ராஜன், கீழே விழுந்த கண்டக்டரை மீண்டும் தாக்கினார். இதில் பயந்து போன கண்டக்டர் அங்கிருந்து எழுந்தபடி அருகில் உள்ள அரசு மருத்துவமனையை நோக்கி ஓடினார். ஆனாலும் அவரை மீண்டும் தாக்க துரத்தியதாக கூறப்படுகிறது. இதை பார்த்த பொதுமக்கள் அங்கு கூடினர்.
இதனை தொடர்ந்து ராஜன் கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இதில் படுகாயமடைந்த கண்டக்டர் பிஜிலிகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்தை அறிந்த பணிமனை போக்குவரத்து தொழிலாளர்கள் மருத்துவமனை முன்பு திரண்டனர். கண்டக்டர் பிஜிலிகரை தாக்கிய நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷங்களை எழுப்பினர்.
இந்த சம்பவத்தால் குளச்சல் அரசு மருத்துவமனை முன்பு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இந்த தாக்குதல் குறித்து குளச்சல் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் போலீசார், ராஜன் மீது அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தது, கொலை மிரட்டல் விடுத்தது உள்பட 4 பிரிவுகளில் வழக்குப்பதிந்து நேற்று அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

எஸ்ஐஆர் படிவங்களை நிரப்ப திமுக இளைஞர் அணி உதவ வேண்டும் : அமைச்சர் கீதாஜீவன் பேச்சு!
திங்கள் 17, நவம்பர் 2025 11:06:00 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை: மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை!
திங்கள் 17, நவம்பர் 2025 8:30:28 AM (IST)

தைப்பூச இருமுடி விழா: மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் 57 எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிற்கும்!
ஞாயிறு 16, நவம்பர் 2025 1:28:56 PM (IST)

கனமழை எச்சரிக்கை: நெல்லை-தூத்துக்குடி உள்பட 10 மாவட்டங்களுக்கு விரைந்த பேரிடர் மீட்பு படை
ஞாயிறு 16, நவம்பர் 2025 11:41:16 AM (IST)

நடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் : பெண் சிக்கினார்
ஞாயிறு 16, நவம்பர் 2025 11:39:41 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு: 2,632 பேர் எழுதினர்; 404 பேர் வரவில்லை!
ஞாயிறு 16, நவம்பர் 2025 11:32:55 AM (IST)





இதுNov 17, 2025 - 10:22:58 AM | Posted IP 172.7*****